சென்னை: வழக்கம் போல் இல்லாத அளவிற்கு டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கிய முதல்வரின் அறிவிப்புக்கு தொமுச தொழிற்சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
தொமுச (டாஸ்மாக்) பொது செயலாளர் எம்.சிவப்பிரகாசம் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லரை விற்பனை கடைகளில் தற்போது சுமார் 26 ஆயிரம் பகுதிநேர, தொகுப்பூதிய, தற்காலிக பணியாளர்கள் குறைந்தபட்ச ஊதியத்துக்குகும், குறைவான ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், மானிய கோரிக்கைக்கு முன்பாக அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் கோரிக்கை குறித்து வலியுறுத்தினோம். அப்போது அமைச்சர் முதல்வரிடம் ஆலோசனை பெற்று வழக்கம்போல் இல்லாத அளவிற்கு ஊதியத்தை கூடுதலாக உயர்த்தி வழங்குவதாக தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் மேற்பார்வையாளர் ரூ.1100, விற்பனையாளர் ரூ.730, உதவி விற்பனையாளர் ரூ.840 என ஊதியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இது சென்ற முறை வழங்கியதை விட ரூ.600, ரூ.430, ரூ.340 என கூடுதலாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. குடும்ப நலநிதி ரூ.3 லட்சமாக இருந்தது ரூ.5லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் தொ.மு.ச. இந்த அறிவிப்புகளை மகிழ்ச்சியோடு வரவேற்கிறது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பள்ளத்தூர் டாஸ்மாக் கடை எண்.7721ல் நடந்த பெட்ரோல் குண்டு வெடிப்பு சம்பவத்தில் படுகாயம் அடைந்து உயிரிழந்த விற்பனையாளர் அர்ச்சுணனின் குடும்பத்தாருக்கு தொமுசவின் கோரிக்கையை பரிசீலித்து நிரந்தர அரசுப் பணியாளருக்கு வழங்குவதைப் போல் முதல்வர் நிவாரண நிதியாக ரூ.10 லட்சம், குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசுப் பணி வழங்கிடவும் உடனடியாக ஆணையிட்ட முதல்வரின் அறிவிப்பு டாஸ்மாக் பணியாளர்களுக்கு மிகுந்த மன ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.