தஞ்சை: தஞ்சை மாதாகோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தஞ்சை அடுத்த மாதாகோட்டையில் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு மாதாக்கோட்டை லூர்துமாதா ஆலய தெருவில் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இதில் தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, அரியலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 600 காளைகளும், 350 மாடுபிடி வீரர்களும் கலந்துக் கொண்டுள்ளனர். காளைகளையும், வீரர்களையும் மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து களத்துக்குள் அனுப்பினர்.
காளைகள் திறந்துவிடப்படும் வாடிவாசலில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை 1 அடி உயரத்துக்கு தென்னை நார்கள் பரப்பப்பட்டு இருந்தன. அதேபோல் காளைகள், பார்வையாளர் பகுதிக்குள் சென்றுவிடாதபடி தடுக்க இரும்பு கம்பிகள், சவுக்கு கட்டைகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. ஒவ்வொரு காளையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.
அவைகள் துள்ளிக்குதித்து களத்துக்குள் வந்து சீறிப்பாய்ந்தது. காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வாஷிங்மிஷின், ப்ரிட்ஜ், பீரோ, கட்டில், சைக்கிள், எவர்சில்வர் குடம், குவளை உள்ளிட்ட பல பரிசுப் பொருட்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டது. காளையை வீரர்கள் அடக்கும் போது கரவொலி எழுப்பி மக்கள் உற்சாகப்படுத்தி வருகின்றனர். இன்று 5மாலை மணி வரை போட்டி நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கும் வீரருக்கு பைக் ஒன்று பரிசாக வழங்கப்படுகிறது.