Saturday, July 27, 2024
Home » தமிழர்களும்… இறைச்சி உணவுகளும் !

தமிழர்களும்… இறைச்சி உணவுகளும் !

by Lavanya

மனித உடல் வளர்ச்சிக்கு குறிப்பிட்ட அளவு விலங்குப் புரதம் அவசியம் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி வருகிறது. நம் பண்பாட்டில் இறைச்சி உண்பது நெடுங்காலமாக வழக்கத்தில் இருக்கிறது. ஆனால் மனித உடற்கூறு ஆய்வின்படியும், பல் அமைப்பின் படியும் மனிதர்கள் தாவர உண்ணிகளே என்று ஒரு சில ஆய்வாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனாலும் மனிதர்கள் இறைச்சி உண்பது இன்றளவும் உலகெங்கிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதில் தமிழர்கள் உட்கொள்ளும் இறைச்சி வகைகளையும், அவற்றின் பயன்களையும் இங்கு காண்போம்.

ஆட்டு இறைச்சி

பொதுவாக சிற்றூர்களில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஆட்டிறைச்சி விற்கப்படுகிறது. இதற்கென்று தனிக்கடைகள் ஏதும் இல்லை. வழக்கமாக மக்கள் கூடும் இடங்களில் இறைச்சி கூறுபோட்டு விற்கப்படுகிறது. ஒவ்வொரு கூறிலும் ஆட்டின் அனைத்து பாகங்களும் அமைந்திருக்கும். பெரும்பாலும் ஆட்டுக் கிடாய்களையே இறைச்சிக்குப் பயன்படுத்துகிறார்கள். இறைச்சி உண்ணும் அனைவரும் ஆட்டிறைச்சியை உண்ணுகிறார்கள். ஆனாலும் குடல், தலை போன்ற பாகங்களை ஒரு சிலர் மட்டுமே உண்ணுகிறார்கள். ஆட்டு இறைச்சி உடலில் உள்ள வெப்பத்தைத் தணித்துக் குளிர்ச்சியைத் தரும் என்று நம்புகிறார்கள். பல்வேறு வகை ஆடுகளின் இறைச்சி வகைகளின் குணம் பற்றி பதார்த்த குணபாடம் கூறுகிறது.

வெள்ளாட்டு இறைச்சி

வெள்ளாட்டு இறைச்சியை உண்பவருக்கு உட்சுரங்களும், வாத பைத்தியமும், காசநோயும் போகும். உடல் புஷ்டியும், வீரிய விருத்தியும் உண்டாகும்.

கொடியாட்டு இறைச்சி

கொடியாட்டு இறைச்சியைப் பூவைப் போல வேகவைத்துப் பாகஞ்செய்து காலையில் உட்கொண்டால் இடுப்புவலி, குத்திருமல், வெட்டை, காசம், உஷ்ண வாயு ஆகியவை போகும்.

வரையாட்டு இறைச்சி

வன மூலிகைகள் தின்கின்ற வரையாட்டு இறைச்சி கனத்த நோய்களையும், மெலிவையும் போக்கும். இக்கறி பத்தியத்திற்கு உகந்ததாகும்.

செம்மறியாட்டு இறைச்சி

செம்மறியாட்டு இறைச்சியை உட்கொண்டால் செங்கரப்பானும் உடலில் முன்பு இல்லாத பலவித நோய்களையும் உண்டாக்கி உடலுக்குத் துன்பத்தைத் தரும்.

பள்ளையாட்டு இறைச்சி

பள்ளையாட்டு இறைச்சி மந்தத்தை அதிகப்படுத்தும், பசியைப் போக்கும், சளி தொடர்பான நோய்கள், அதிவாத நோய்கள் ஆகியவை உண்டாகும்.

குறும்பாட்டு இறைச்சி

குறும்பாட்டு இறைச்சியை உண்பவர்க்கு நமைச்சல், சொறி, சிரங்கு, குடல் வாதம், சூலை ஆகியவை உண்டாகும்.மேற்கண்ட ஆடுகளில் செம்மறி ஆடு தவிர பிற ஆடுகளை நாட்டுப்புற மக்கள் உண்ணுகிறார்கள். இறைச்சி வகைகளில் கோழிக்கு அடுத்து அதிகமாக உண்ணப்படுவதும் ஆட்டிறைச்சியே.

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சி உண்ணும் வழக்கம் அனைத்து தரப்பு மக்களிடமும் தற்காலத்தில் காணப்படுகிறது. இராமாயணம் எழுதிய வால்மீகி தனது ஆசிரம விருந்தினர்களுக்கு மாட்டுக்கறி விருந்தளிப்பது வழக்கம் என இராமாயணம் தெரிவிக்கின்றது.

பன்றி இறைச்சி

பன்றி இறைச்சி உண்ணும் வழக்கம் சங்க காலம் தொட்டே நம் மக்களிடம் காணப்படுகிறது. அதற்கான இலக்கியச் சான்றுகள் உண்டு.மலை வழிகளில் சென்ற கூத்தர்கள் தினைப்புனங் காவல் செய்த காவலர்களால் கொல்லப்பட்ட காட்டுப் பன்றிகளைப் பெற்று, அவற்றின் மயிரைப் போக்கிவிட்டு அங்கே மூங்கில் உராய்வதால் பற்றி எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் அவற்றை வதக்கி அந்தப் பன்றிகளின் இறைச்சியை உண்டனர் என்ற செய்தியை மலைபடுகடாம் குறிப்பிடுகிறது.குட்டையான கால்களையுடைய கொழுப்புமிக்கப் பன்றியின் இறைச்சியை துண்டம் துண்டமாக வெட்டி நெய்யிற் பெய்து பொரித்து அதனைத் தினந்தோறும் காலையில் சோற்றுணவுடன் கலந்து நன்னன் கொடுக்க அதனால் புலவரின் பசி நீங்கியது என்று புறநானூறு கூறுகிறது.ஒருவர், சோற்றோடு கலந்து கொடுத்த பன்றி இறைச்சியை புத்தர் (இறைச்சி கலந்திருப்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே) உண்டார் அவருக்குப் புலால் உண்டு பழக்கமின்மையால் பன்றி இறைச்சி செரிக்காமல் உண்ட அன்றைக்கே உயிர் துறந்தார் என்னும் தகவலை மறைமலை அடிகள் குறிப்பிட்டுள்ளார். பன்றி இறைச்சி உண்ணும் வழக்கம் பல்வேறு நாடுகளிலும், தீவுகளிலும் காணப்படுகிறது. மெலனீசியத் தீவுகளில் வாழும் பழங்குடியினர் தங்கள் தேவைக்கு எஞ்சிய மரவள்ளிக் கிழங்குகளை பன்றிகளுக்கு உணவாக்குவதன் மூலம் பெருகும் பன்றிகளை நீண்டகாலம் வைத்திருக்க முடியாது என்பதனால் அண்டைய கிராமங்களில் வாழும் மக்களுடன் பகிர்ந்து கொள்வர். இவர்களுக்குப் பஞ்சம் ஏற்படும்போது அவர்களிடம் பகிர்ந்து கொள்வர் என்பதை பக்தவத்சலபாரதி குறிப்பிடுகிறார். இப்படிப் பழங்காலந்தொட்டே பன்றி இறைச்சி உண்ணும் வழக்கம் நம் மக்களிடையேயும், உலக அளவிலும் உள்ளது.‘‘எண்ணிக் கறிவகை எத்தனை பொரித்தாலும் பண்ணிக் கறியாகுமோ பராபரமே”என்கின்றனர் பன்றி இறைச்சி உண்பவர்கள். பன்றி இறைச்சி உடம்புக்கு குளிர்ச்சியைத் தரும். எனவே மூலநோய் உடையவர்கள் இதனை உண்டால் வேறு மருந்து தேவை இல்லை என்கிறார்கள்.

– இரத்தின புகழேந்தி

You may also like

Leave a Comment

4 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi