சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3வது நாள் கூட்டம் தொடங்கியது. தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அறிவித்தபடி, நடப்பு ஆண்டின் இரண்டாவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 9ம் தேதி கூடியது. தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்தனர். முக்கியமாக காவிரி விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசை வலியுறுத்தி கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர, மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
நேற்று சிறையில் நீண்டகாலமாக உள்ள இஸ்லாமியர்களை விடுவிக்க கோரி அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர். இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3வது நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்க இன்று சட்டதிருத்த மசோதா கொண்டுவரப்படவுள்ளது. வேளாண் மண்டல மேம்படுத்துதல் திருத்த சட்ட முன்வடிவை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார்.
ஏற்கனவே தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், போக்குவரத்துத்துறை சார்ந்த கட்டணங்கள் உயர்வு குறித்த மசோதா இன்று தாக்கலாகிறது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார். சுற்றுலா ஊர்திகள், ஆம்னி பேருந்துகளுக்கான வரி உயர்த்தப்படுகிறது. அரசின் வருவாயை பெருக்கும் வகையில் கட்டணங்கள் உயர்த்தப்படுகிறது.
வாகனங்களின் எடைக்கு ஏற்ப வரி, வாகனங்களின் ஆயுட்கால வரியை வருடா வருடம் செலுத்தும் முறையும் மசோதாவில் உள்ளது. இதனிடையே, இஸ்லாமியர்கள் மட்டுமின்றி நீண்டகாலமாக சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க பாஜக கவன ஈர்ப்பு கொண்டுவரவுள்ளது. கவன ஈர்ப்பு தீர்மானம் ஏற்கப்படாவிட்டால் வெளிநடப்பு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது.