சென்னை: தமிழ்நாடுதொழிலாளர் நலத்துறை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளில் பெரும்பான்மையாக வெளிமாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு நிர்வாகத்தினரால் ஏற்படுத்தி தரப்பட்டுள்ள தங்கும் விடுதிகள் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்பட்டு அவர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்கப்படுவதை கண்காணிக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் கட்டிட மற்றும் இதர கட்டுமான பிரிவு அலுவலர்களால் வருவாய்த்துறை அலுவலர்களுடன் இணைந்து கடந்த 3 வாரங்களாக சிறப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
கட்டுமான தொழிலாளர்கள் தங்குவதற்காக ஏற்படுத்தி தரப்பட்டுள்ள தங்கும் விடுதிகளிலும் கட்டுமான பணியிடங்களிலும் தொழிலாளர்களின் உடல்நலம், பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டில் கட்டுமான பணிகள் அதிகமாக நடைபெற்று வரும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் கடந்த 3 வாரங்களில் 152 கட்டுமான பணியிடங்கள் மற்றும் தொழிலாளர்களின் தங்கும் விடுதிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் கடும் முரண்பாடுகள் காணப்பட்ட 47 கட்டுமான நிறுவனங்களின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதில் கண்டறியப்பட்ட முரண்பாடுகளுக்கு கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.