Wednesday, May 22, 2024
Home » தமிழகத்தில் விதிமுறைகளை பின்பற்றி மே தின கொண்டாட்டங்களுக்கு கலெக்டர்கள் அனுமதி வழங்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகத்தில் விதிமுறைகளை பின்பற்றி மே தின கொண்டாட்டங்களுக்கு கலெக்டர்கள் அனுமதி வழங்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

by Karthik Yash

சென்னை: தமிழகத்தில் விதிமுறைகளை பின்பற்றி மே தின கொண்டாட்டத்திற்கு கலெக்டர்கள் அனுமதி வழங்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற பொதுத்தேர்தல் ஏப். 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டமாக நடைபெறுவதால், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த மார்ச் 16ம் தேதியில் இருந்து அமலில் உள்ளது. தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் முதல் கட்டமாக கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது.

தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்து விட்டாலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 4 வரை தொடரும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். ஆனாலும், அரசு திட்டங்களுக்கான அனுமதி தேவைப்பட்டால் தேர்தல் ஆணையத்திடம் கடிதம் எழுதி ஒப்புதல் பெற்று, அதை நடைமுறைப்படுத்தலாம் என்று கூறியுள்ளார். வருகிற மே 1ம் தேதி தொழிலாளர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் தமிழகத்தில் அனைத்து தொழிலாளர்களும் கட்சி சார்பிலோ அல்லது தனி அமைப்பாகவோ கொடியேற்றி சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். சென்னையில் திமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மே 1ம் தேதி தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவுக்கு ஊர்வலமாக சென்று சிறப்பாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், ஊர்வலம் மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சிகளுக்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டியுள்ளது. அதன்படி பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் தொழிலாளர்கள் தினம் கொண்டாட தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் கடிதம் மூலம் அனுமதி கேட்டுள்ளனர். இதுபற்றி தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்தார். தற்போது, தமிழகத்தில் தேர்தல் முடிந்துள்ள நிலையில், விதிமுறைகளை பின்பற்றி மே தின கொண்டாட்டத்திற்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அனுமதி வழங்கலாம் என்று தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

You may also like

Leave a Comment

13 + four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi