திண்டுக்கல்: ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றின் சுழற்சி காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஒரு வாரமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. திண்டுக்கல்லில் இன்று காலை முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது.
கடந்த 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருவதன் காரணமாக பள்ளி மாணவர்கள், பணிக்காக அலுவலகம் செல்வோர் ஆகியோர் பாதிப்பிற்குள்ளாகினர். திண்டுக்கல், வெள்ளை விநாயகர் கோயில், ஒத்த கண் பாலம், திருச்சி ரோடு, பாலகிருஷ்ணாபுரம், கோபால் நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தற்போது மழை சற்று ஓய்ந்துள்ளதால் மாவட்ட ஆட்சியர் பூங்கோடி, மாநகராட்சி மேயர் உள்ளிட்டோர் மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.