டெல்லி: தமிழ்நாட்டுக்கு கர்நாடகா 12,500 கனஅடி நீர் திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவின் 87வது கூட்டம் காணொலி மூலம் நடைபெற்று வருகிறது. காவிரி ஒழுங்காற்றுக்குழு தலைவர் வினீத் குப்தா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், குழுவின் செயலாளர் டி.டி.ஷர்மா, உறுப்பினர் கோபால் ராய் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு அரசு சார்பில் காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியம் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வினாடிக்கு 5,000 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பது உத்தரவாக இருந்தது. ஆனால் தொடர்ந்து கர்நாடகம் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை அமல்படுத்தாததால் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடகம் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி வினாடிக்கு 5,000 கனஅடி தண்ணீரை கர்நாடகம் தற்போது திறந்து விட்டுள்ளது.
இதனிடையே, காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று கர்நாடகாவின் பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 87வது கூட்டம் காணொலி மூலம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டுக்கு கர்நாடகா 12,500 கனஅடி நீர் திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு எவ்வளவு தண்ணீரை கர்நாடகம், தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.