சென்னை: சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலா அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில் இன்று (14.3.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு சுற்றுலா வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சி.சமயமூர்த்தி முன்னிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் பேசுகையில் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கைகளால் இந்தியாவிலேயே தமிழ்நாடு அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முதன்மை சுற்றுலாத் தலமாக முன்னேறி உள்ளது. கொரோனாவிற்கு பிறகு 2021 ஆம் ஆண்டில் 57,622 ஆக இருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 4,07,139 ஆகவும், 2023 ஆம் ஆண்டில் 11,74,899 ஆகவும் உயர்ந்துள்ளது. தற்போது 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1,37,563 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளார்கள்.
இதே போன்று உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2021 ல் 11,53,36,719 ஆக இருந்து 2022 ல் 21,85,84,846 ஆகவும், 2023 ல் 28,60,11,515 என உயர்ந்துள்ளது. தற்போது 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2,81,96,899 உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளார்கள்.
தமிழ்நாட்டிற்கு ஆண்டு முழுவதும் அதிக சுற்றுலா பயணிகள் வருகை தரும் வகையில் முதலமைச்சர் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு சுற்றுலா வளர்ச்சித்திட்டப் பணிகளை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும் சுற்றுலாத்துறைக்கு தொழில் அந்தஸ்தை வழங்கும் சுற்றுலா கொள்கையை வெளியிட்டுள்ளார்கள்.
சாகச சுற்றுலா, பொழுதுபோக்கு சுற்றுலா, கேரவன் சுற்றுலா, கிராமப்புற மற்றும் தோட்ட சுற்றுலா, கடலோர சுற்றுலா, கலாச்சார சுற்றுலா, மருத்துவம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, MICE சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா மற்றும் திரைப்படச் சுற்றுலா ஆகிய 12 முன்னுரிமை சுற்றுலாப் பிரிவுகள் கண்டறியப்பட்டு சுற்றுலாத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக முக்கிய கவனம் செலுத்தும் அடிப்படையில் பொழுதுபோக்கு பூங்காக்கள், பாரம்பரிய ஹோட்டல்கள், அனுபவமிக்க ஓய்வு விடுதிகள், சுற்றுச்சூழல்-குடிசைகள்/ முகாம்கள், ரோப்வேகள், ஆரோக்கிய ஓய்வு விடுதிகள், ஓசியானேரியம் / மீன்வளம், கோல்ஃப் மைதானம், தோட்டம் / பண்ணை சுற்றுலா திட்டங்கள், அருங்காட்சியகங்கள், சாகச சுற்றுலா திட்டம், குரூஸ் சுற்றுலா திட்டம் மற்றும் கேரவன் சுற்றுலா திட்டம் ஆகிய 13 தகுதியான சுற்றுலாத் திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மாவட்ட சுற்றுலா அலுவலர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தங்கள் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் வாய்ப்புகள் குறித்து, தங்கள் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர்களுக்கு தெரிவித்து புதிய சுற்றுலா தலங்களின் உருவாக்கத்திற்கும், மேம்பாட்டிற்கு பணியாற்றிட வேண்டும்.
சுற்றுலா வளர்ச்சித்திட்டப்பணிகளை குறித்த காலத்திற்குள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் சுற்றுலா அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும். சுற்றுலா மேம்பாட்டுத் திட்டப்பணிகள், உலக சுற்றுலா பயணிகளின் விருப்பமான முக்கிய சுற்றுலாத்தலமாக தமிழ்நாட்டை உருவாக்கும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார்.