சென்னை: இதுகுறித்து தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பில் கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் இன்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர் கல்வி துறை அமைசச்ர் ராஜகண்ணப்பனை சந்தித்து அளித்த மனுவில் கூறி இருப்பதாவது: தமிழ்நாட்டில் யாதவர்கள் அனைத்து பகுதியிலும் வாழ்ந்து வருகிறார்கள். இந்த மக்களின் நீண்டநாள் கோரிக்கையான சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி விகிதாச்சார முறையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் அல்லது யாதவர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதாகும்.
இதுபற்றி பலமுறை அரசுக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டதுடன், கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடத்தி அரசின் கவனத்தை ஈர்த்து உள்ளோம். தமிழகத்தில் வாழும் யாதவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டிய அவசியத்தை அமைச்சர், முதல்வரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்பில் அனைத்து துறைகளிலும் உரிய பங்களிப்பு கிடைக்காமல் சுமார் 34 ஆண்டுகளாக தமிழக யாதவர்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். இதை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். யாதவர்களின் கோரிக்கையை தமிழக முதல்வரும் ஏற்பார் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.