சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் நிதிநிலை அதல பாதாளத்திற்கு சென்று விட்டதாகவும், தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் தொகை அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்து விடும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருக்கிறார். இக்கருத்தை கூறுவதற்கு முன் ஒன்றிய பாஜ அரசின் கடன் நிலைமை என்ன என்பது குறித்து அவர் அறிந்திருக்க வேண்டும்.
ஒன்றிய பாஜக அரசின் மொத்த கடன் 2023 மார்ச் 31ம் தேதி நிலவரப்படி ரூ.153 லட்சம் கோடியாக இருந்தது. இது வரும் 2024 மார்ச் 31ல் ரூ.169 லட்சம் கோடியாக உயர்ந்துவிடும் என்று செய்தி வெளிவந்துள்ளது. இதன்மூலம் ஒரே ஆண்டில் ரூ.16 லட்சம் கோடி கடன் உயர்ந்துவிடும் என்று கூறப்பட்டிருக்கிறது. நாடு விடுதலை பெற்ற பிறகு 67 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்த போது மொத்த கடன் ரூ.55 லட்சம் கோடி தான்.
ஒன்றிய பாஜ அரசு தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து விட்டு பாஜ ஆளுகிற உத்தரபிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களுக்கு அதிக நிதியும், எதிர்கட்சிகள் ஆளும் தமிழகத்தைப் போன்ற மாநிலங்களுக்கு பாரபட்சமாக நிதி வழங்குதையும் தொடர்ந்து கடைபிடிப்பதை நிர்மலா சீதாராமன் நியாயப்படுத்தி பேசி வருகிறார். அதற்கு நறுக்கென்று ஒரே வார்த்தையில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஒன்றிய அரசுக்கு ரூ. 1 வரியாக வழங்கினால் 29 பைசா தான் திரும்பி வருகிறது என்று கூறியிருக்கிறார். இதற்கு நேரிடையாக பதில் கூறாமல் நிர்மலா சீதாராமன் விதண்டாவாதங்களை பேசி வருகிறார். இதை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.