மண்டியா: காவிரி போராட்டத்தில் மைசூரு, பெங்களூரு மக்கள் கலந்து கொள்ள வேண்டும் என பாஜவினர் வலியுறுத்தினர். தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், கன்னட அமைப்பினர் மண்டியா மாவட்டத்தில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், பாஜவினரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், பெங்களூரு, மைசூரு மக்கள் காவிரி தண்ணீருக்காக போராட்டம் நடத்த வேண்டும்.
காங்கிரஸ் அரசு இதேபோல், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டு வந்தால் ஒரு கட்டத்தில் பெங்களூரு, மைசூரு மக்கள் நீரில்லாமல் தவிக்கும் நிலை ஏற்படும். அதுபோன்ற நிலை வரக்கூடாது என்றால் உடனே மைசூரு, பெங்களூரு மக்கள் அனைவரும் போராட்டம் நடத்த வேண்டும். நாம் ரத்த கையெழுத்து போட்டாலும், கழுத்தை அறுத்து கொண்டாலும் காங்கிரஸ் அரசு தமிழகத்திற்கு தண்ணீர் விடுவதை நிறுத்துவதாக தெரியவில்லை. பெங்களூரு, மண்டியா, மைசூரு எம்பி, எம்எல்ஏக்கள் இது தொடர்பாக பேச வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு எதற்கும் தண்ணீர் இருக்காது. இதனுடன் சினிமா நடிகர்களும் போராட்டம் நடத்த வேண்டும் என்றனர்.