சென்னை: தமிழ்நாட்டில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக நேற்று 8 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. அதிகபட்சமாக திருப்பத்தூரில் 108 டிகிரி வெயில் கொளுத்தியது. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்கள் தவிர பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. தமிழக உள் மாவட்டங்களில் சமவெளிப் பகுதிகள் மற்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2-4 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக இருந்தது. தமிழக கடலோரப் பகுதிகளில் இயல்பைவிட அதிகமாகவும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் வெப்பம் இருந்தது. வெயிலைப் பொறுத்தவரையில் திருப்பத்தூரில் 108 டிகிரி வெயில் கொளுத்தியது. சேலம், ஈரோடு பகுதியில் 104 டிகிரி, கரூர், நாமக்கல் 102 டிகிரி, மதுரை, திருச்சி, திருத்தணி, வேலூர் 100 டிகிரி வெயில் நிலவியது.
இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் 100 டிகிரி முதல் 102 டிகிரி வரை வெயில் இருந்தது. மலைப் பகுதிகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்தது. சென்னை மீனம்பாக்கத்தில் 98 டிகிரி வெயில் இருந்தது.
இந்நிலையில், தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. அதனால் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யும் வாய்ப்புள்ளது. நாளை, தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்திலும் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. 14 முதல் 16ம் தேதி வரை இதேநிலை நீடிக்கும்.
மேலும், 17ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை இருக்கும். அதிபட்ச வெப்பநிலையை பொறுத்தவரையில் உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் அனேக இடங்களில் 90 டிகிரி மதல் 104 டிகிரி வரையிலும், பெரும்பாலான இடங்களில் 90 டிகிரி வரையும் வெயில் நிலவும். அதிக வெப்ப நிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது, ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம்.