சென்னை: சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மரக்கன்றுகளை நட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்றும், மத்திய பல்கலைக்கழகத்தில் பசுமைப் பல்கலைக்கழகமாக மாற்றும் வகையில் மரக்கன்றுகள் நட வேண்டும் என்றும் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன்(திமுக) கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் கொரோனா காலகட்டத்தில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு கருவேலை மரங்கள் முழுவதுமாக அகற்றப்பட்டு, 75 லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.
மேலும், பள்ளி கல்லூரிகளில் மரக்கன்றுகள் நடுவது மட்டுமல்லாமல் பசுமை பள்ளி எனும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் 2021- 22ம் நிதியாண்டில் தொடங்கி வைத்து ஒவ்வொரு பள்ளிக்கும் 20 லட்சம் மதிப்பீட்டில் மூலிகைத் தோட்டம், சோலார் மூலம் மின்சாரம், காய்கறி தோட்டம், நெகிழியற்ற வளாகம், மழைநீர் சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், வரும் நிதியாண்டில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 பள்ளிகளில் பசுமை பள்ளி திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்த அவர், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளில் மரக்கன்றுகளை நட அனைத்து நடவடிக்கையும் அரசு மேற்கொள்ளும். இவ்வாறு அவர் பேசினார்.