Tuesday, May 21, 2024
Home » தமிழகத்தில் 3வது இடத்துக்கு தள்ளப்படும்; பாஜக பல தொகுதிகளில் டெபாசிட் இழக்கும்: ஒன்றிய உளவுத்துறை கணிப்பு பற்றிய பரபரப்பு தகவல்

தமிழகத்தில் 3வது இடத்துக்கு தள்ளப்படும்; பாஜக பல தொகுதிகளில் டெபாசிட் இழக்கும்: ஒன்றிய உளவுத்துறை கணிப்பு பற்றிய பரபரப்பு தகவல்

by MuthuKumar

சென்னை: தமிழகத்தில் பாஜக 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், பல தொகுதிகளில் அது டெபாசிட் இழக்கும் என்றும் ஒன்றிய அரசின் உளவுத்துறை கணிப்பில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை எடப்பாடி பழனிச்சாமி விலக்கினார். இதனால் அதிமுக அணியில் உள்ள பல கட்சிகளையும் பணம் மற்றும் மிரட்டல் மூலம் தங்களது அணிக்கு இழுத்துக் கொண்டது. அதைத் தவிர அதிமுகவில் இருந்து வெளியேறி, தனி அணி மற்றும் தனிக் கட்சி நடத்தியவர்களையும் தங்களுடன் இணைத்துக் கொண்டது. இதன்மூலம் தாங்கள் வளர்ந்து விட்டதாகவும், தங்கள் தலைமையில் அணி அமைக்கப்பட்டுள்ளதால், பாஜக பெரிய அணியாக மாறிவிட்டது என்று தெரிவித்தனர். இதற்கு ஏற்றாற்போல பிரச்சாரத்தையும் ஆரம்பித்தனர்.

ஆரம்பத்தில் மீடியாக்கள் மூலம் தங்கள் பிரச்சாரத்தை பாஜக தொடங்கியது. கருத்து கணிப்புகள் என்ற பெயரில் கருத்து திணிப்புகளைவெளியிட்டது. ஆனால் அந்த கணிப்புகள் எல்லாம் ஒரு அறைக்குள் தயாரிக்கப்பட்ட கட்டுரைகள் என்பது மக்கள் மனதில் உள்ள கருத்துக்கள் மூலம் வெளியாகின. இதனால் ஆரம்பத்தில் கருத்து திணிப்புகளை வெளியிட்ட மீடியாக்கள் தற்போது அடக்கி வாசிக்கத் தொடங்கிவிட்டன. அதற்கு முக்கிய காரணம், அவர்களின் டிஆர்பி ரேட்டிங் இறங்க ஆரம்பித்ததுதான். அதேநேரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கட்சியையும், கூட்டணியையும் முன்னிறுத்தாமல் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தத் தொடங்கினார். இதனால் கூட்டணியில் இருந்து வெளியேறியது மட்டும் இல்லாமல் கூட்டணிக் கட்சிகளுக்குள்ளும் புகைச்சல் எழுந்தது.

இதனால் ஓ.பன்னீர்செல்வம், வாசன் உள்ளிட்ட தலைவர்கள் அவமானப்படுத்தப்பட்டதாக புகார்கள் எழுந்தன. ஆனால் அவர்கள் அதையும் மோடிக்காக தாங்கிக் கொண்டு அமைதியாகிவிட்டனர். இந்தநிலையில், ஆரம்பத்தில் மீடியாக்கள் மோடி, அமித்ஷா பிரச்சாரம், கோவையில் அதிமுக வேட்பாளருடன் அண்ணாமலையின் மோதல் என செய்திகள் தொடர்ந்து வந்ததால் ஏதோ பாஜக கூட்டணி பல தொகுதிகளில் 2வது இடத்துக்கு வந்தாலும் ஆச்சரியம் இல்லை என்ற அளவில் தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது பிரச்சார வேகம் ஆரம்பித்தவுடன் பாஜகவின் உண்மை முகம் வெளியில் தெரிய ஆரம்பித்தது. மக்களின் மனநிலையும் வெளிப்படத் தொடங்கிவிட்டது. தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி, சீமான் ஆகியோர் எழுப்பும் கேள்விகளுக்கு பாஜகவிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் கூற முடியாமல் சுதந்திரம் அடைந்த காலத்தில் உள்ள பிரச்னைகளை எல்லாம் இப்போது பேசத் தொடங்கிவிட்டனர்.

பாஜக எழுப்பும் பிரச்னைகள் எல்லாம் தற்போதைய தலைமுறையினருக்கு தெரியவில்லை. அதனால் அவர்களுக்கு அதைப் பற்றிய புரிதல் இல்லை. அதை வைத்து குளிர் காயலாம் என்று பாஜக கருதியது. ஆனால் இப்போது விரல் நுனியில் தகவல்கள் வெளியில் தெரிவதால், அவர்கள் சொல்வது எல்லாம் பொய் என்று தெரிந்துவிடுகிறது. அதைக் கூட கண்டுபிடிக்கமுடியாமல், தமிழக வாக்காளர்களை ஏமாளிகளாக நினைத்து பேசி வருகின்றனர். இதனால் நாளுக்கு நாள் பாஜகவின் ஆதரவு சரியத் தொடங்கிவிட்டது.

மேலும் பாஜகவுக்கு பல தொகுதிகளில் போட்டியிட ஆட்கள் கிடைக்காமல் திணறி வந்தனர். குறிப்பாக அண்ணாமலையே கரூரில் நிற்காமல் கோவையில் நின்றார். கோவையைச் சேர்ந்த முருகானந்தம், திருப்பூரில் நிறுத்தப்பட்டார். ராமநாதபுரத்தைச் சேர்ந்த பொன்.பாலகணபதி திருவள்ளூரிலும், தேனியைச் சேர்ந்த பன்னீர்செல்வம், ராமநாதபுரத்திலும், சென்னையைச் சேர்ந்த டிடிவி தினகரன் தேனியிலும், விருதுநகரைச் சேர்ந்த சீனிவாசன், மதுரையிலும், விழுப்புரத்தைச் சேர்ந்த அஸ்வத்தாமன் திருவண்ணாமலையிலும் நிற்கும் நிலை உருவாகியுள்ளது.

இப்படி பாஜக தொட்டதெல்லாம் வீணாகி வந்தது.
தற்போது ஒன்றிய உளவுத்துறை மாநிலம் முழுவதும் சர்வே எடுத்துள்ளது. அதில் பல தொகுதிகளில் பாஜக டெபாசிட் வாங்காது என்று தெரியவந்துள்ளது. பெரிய தலைவர்கள் போட்டியிடும் கோவை, கன்னியாகுமரி, நெல்லை, வடசென்னை, மத்திய சென்னை, நாமக்கல் தொகுதிகளில் தற்போது பாஜக 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். கூட்டணியில் போட்டியிடும் தலைவர்களுக்கும் அதே நிலைதான் தற்போது உருவாகியுள்ளது. அவர்களுக்கு ஒரே ஆறுதல் வேலூரில் மட்டும் பாஜக அணியில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் 2வது இடத்தில் உள்ளார்.

மற்ற இடங்களில் 3வது இடத்திலும், சில இடங்களில் 4வது இடத்திற்கும் சென்று விட்டனர். இதனால் மோடி, அமித்ஷா மற்றும் தேசிய தலைவர்கள் தமிழகத்தில் தொடர் பிரச்சாரங்களை செய்தால்தான் டெபாசிட் இழக்காமல் தப்பிக்க முடியும் என்று தெரியவந்துள்ளது. இந்த ரிப்போர்ட் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் தமிழகத்தில் தொடர் விசிட் அடிப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார்களாம்.

அதேபோல பாஜக வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவுக்காக ஆரம்பத்தில் ரூ.50 கோடி வழங்கப்படும் என்று கூறினார்களாம். ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட கட்சியில் இருந்து வழங்கவில்லையாம். கோவையில் மட்டும் வெளி மாநிலத்தில் இருந்து 3 ஆயிரம் பேர் இறக்கப்பட்டு பணத்தை செலவு செய்கிறார்களாம். அண்ணாமலைக்கும் அவரது வழக்கம்போல நண்பர்கள் பணத்தை செலவு செய்கிறார்களாம். இதனால் மற்ற வேட்பாளர்கள் தேர்தல் செலவுக்கு பணம் இல்லாமல் திணறி வருகின்றனர். இப்படியே சென்றால், கட்சி பணத்தை தராவிட்டால் 3வது இடம் மட்டுமல்ல 4வது இடம், ஏன் நோட்டாவுக்கு கீழே சென்றாலும் ஆச்சரியம் இல்லை என்கின்றனர் ஒன்றிய உளவுத்துறை அதிகாரிகள்.

You may also like

Leave a Comment

15 − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi