திருவாரூர்: தமிழ்நாட்டில் மேலும் 4,200 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட வேண்டும் என்ற அறிவிப்புக்கு 90% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கோயம்பேட்டில் ஆம்னி பேருந்துகள் புக்கிங்கிற்கு 5,000 சதுர அடி இடமே இருந்தது. ஆம்னி பேருந்துகளை நிறுத்துவதற்கு 7,000 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. 300 பேருந்துகளை நிறுத்தும் அளவிற்கு கிளாம்பாக்கத்தில் பார்க்கிங் வசதி உள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஓரிரு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தேவையின்றி பேசுவதை தவிர்த்து ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும். மார்ச் மாத இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் முழுமையாக தயராகிவிடும். கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக 200 நடை பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. சோழிங்கநல்லூரில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
பயணிகள் சிரமமின்றி பயணிக்க தேவையான நடவடிக்கைகளை போக்குவரத்துத் துறை எடுத்து வருகிறது. இந்நிலையில் திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சிவசங்கர்; தமிழ்நாட்டில் மேலும் 4,200 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர உள்ளது, கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரம், கிண்டி, கோயம்பேட்டிற்கு தொடர்ச்சியாக மாநகர பேருந்துகள் இயக்கப்படும். கிளாம்பாக்கத்தில் ஆட்டோக்களை முன்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு தெரிவித்துள்ளார்.