சென்னை: சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துவத்துறை இயக்குநரகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் மற்றும் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் 2.O ஒருங்கிணைத்து, நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் மற்றும் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் 2.0 என்ற இரண்டு திட்டங்களும் புதியதாக சீரமைக்கப்பட்டு, 5 தவணைகளாக வழங்கப்பட்டு வந்த தொகை இனிமேல் 3 தவணைகளாக வழங்கப்படவுள்ளது. வரும் 18ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தமிழ்நாட்டில் 100 இடங்களை தேர்ந்தெடுத்து, அந்த இடங்களில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்கள் ஒரே நாளில் நடத்தப்படும். இந்த முகாம்களில் காப்பீட்டு திட்டத்தில் அட்டைகள் பெறாதவர்கள் கலந்து கொண்டு காப்பீட்டு அட்டை பெற்று பயனடையுமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.