சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் பயன்பெறும் வகையில், காற்றின் ஈர பதத்திலிருந்து நீர் தயாரித்து அளிக்கும் இயந்திரம் (வாயு ஜெல்) ஒன்றை கமல் பண்பாட்டு மையம் சார்பில் நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனைக்கு நேற்று வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, பரந்தாமன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது: என் பிறந்தநாள் என்பதை விட இது ஒரு நல்ல நாள். அரசியல் வியாபாரம் அதை எல்லாம் கடந்து மனித நேயம் சம்மதம் பட்டது. எல்லாம் வரப்புகள் மீறி நல்லவர்கள் எல்லாம் இணைந்து செயல்படும் நல்விழா. அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் மனிதம்சார்ந்து வந்து இருக்கிறோம். திமுக, மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கான முன்னெடுப்பு என்று நீங்கள் கேட்பீர்கள் என்று எனக்கு தெரியும், எல்லோருக்கும் தனி கட்சி உள்ளது. எங்களது நல்லெண்ணம் என்பது எங்கள் அனைவரையும் ஒன்று சேர்த்துள்ளது. மனிதநேயத்துடன் இது தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் குரல்: மக்கள் நீதி மய்யம் சார்பில் நடிகர் கமல்ஹாசன் 69வது பிறந்தநாள் விழா நீலாங்கரையில் நேற்று மாலை நடந்தது. இதில் கமல்ஹாசன் பங்கேற்று கட்சியினர் மற்றும் பொதுமக்களுடன் பிறந்தநாள் கொண்டாடினார். இதில் கமல் பேசுகையில்,‘‘நாடாளுமன்றத்தில் மக்கள் குரல் கேட்க வேண்டும். அது மக்கள் நீதி மய்யத்தின் குரலாக இருக்க வேண்டும். தேர்தல் வந்தவுடன் பல மடங்கு ஓட வேண்டி உள்ளது. நாளை நமதே நமக்கான வேலை காத்திருக்கிறது. மிக சிறப்பான சூழல் நம்மை சுற்றிவர தொடங்கிவிட்டது. என்னுடைய கலை மூலமாக தொடர்ந்து அரசியல் பேசி வருகிறேன். இந்தியன்-2 இந்தியன்-3 வரும் போது அரசியல் மேடையாக அது மாறும்’’ என்றார்.