சென்னை: நாளை முதல் 3 நாட்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 110 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று முதல் அடுத்த ஐந்து தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். தமிழக உள் மாவட்டங்களில் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3-4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
நாளை முதல் மே 3ம் தேதி வரை வட தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 3 – 5 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இன்று முதல் மே 4ம் தேதி வரை உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசி ருசில இடங்களில் 39 – 43 டிகிரி செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38-40 டிகிரி செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36-39 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.
ஈரப்பதம்:
இன்று முதல் மே 4ம் தேதி வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும். மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை.
01.05.2024 முதல் 03.05.2024 வரை வட தமிழக உள்மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் இருக்கக்கூடும்.
ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.