தமிழ்நாட்டின் மழை பெருவெள்ளத்தால் சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட பிரதமர் மோடி வரவேயில்லை. அதற்கு நிதி கூட ஒதுக்கவில்லை. ஆனால், தமிழ், தமிழரின் பெருமைகளை பிரதமர் உலகறிய செய்கிறார். அது குறித்து பெருமிதம் கொள்கிறார் என்று பாஜவினர் பேசி வரும் நிலையில் நடப்பு தேர்தலுக்காக தமிழ் நாட்டுக்கு பல முறை வந்து சென்று விட்டார். வந்த போதும் வட இந்திய தலைவர்களைப் போன்று இந்த முறையும் மோடி ‘தமிழ், தமிழர்’ என்று உச்சரிக்க தவறவில்லை. ஆனால் பாஜ, அதன் பிரதமர் மோடியோ தமிழ், தமிழர் மீதும் பற்று உள்ளவர்களா? இல்லை என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. அவற்றில் சில…
* ரயில்வே, வங்கி என ஒன்றிய அரசுப் பணிகளில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு தருவதில்லை
* ஒன்றிய நிறுவனங்களின் விளம்பர பலகைகள், படிவங்களில் தமிழ் இல்லை. அப்படி இருந்தாலும் இந்தி, ஆங்கில மொழிகளுக்கு பிறகே தமிழ் இடம் பெறுகிறது.
* உலக பொதுமறை தந்த திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தும், காவி பெயின்ட் அடித்தும் அசிங்கப்படுத்தியது.
* கோயில்களில் அனைத்து தமிழ் சாதியினரும் அர்ச்சகராவதை பாஜவும், அதன் துணை அமைப்புகளும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. அது குறித்து பிரதமர் ஏதும் பேசியதில்லை.
* இந்தி மொழி வளர்ச்சிக்கு ஒதுக்குவது போல் உலகின் பழமையான மொழியான செம்மொழி தமிழுக்கு ஒதுக்குவதில்லை.
* பாஜக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட, தமிழ்நாட்டுக்குள் ஓடும் ரயில்களுக்கு கூட தேஜஸ், வந்தே பாரத், அந்தியோதயா என இந்திப் பெயர்கள்தான் சூட்டப்படுகின்றன.
இப்படி பட்டியல் போட ஏராளமான விஷயங்கள் உள்ளன. அதற்கு ஆரம்ப காரணமும் இருக்கிறது. அது 2014ம் ஆண்டு பதவி ஏற்கும் போதே தமிழர்களுக்கு அடித்த ஆப்பு. ஆம் மோடி முதல் முறையாக பிரதமராக பதவி ஏற்ற போது சிறப்பு விருந்தனராக அழைக்கப்பட்டவர் இலங்கை அதிபராக இருந்த ராஜ பக்சே. தமிழர்களை ஆயிரக்கணக்கில் ஈவிரக்கமில்லாமல் கொன்று குவித்ததால் ராஜபக்சே மீது தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் மட்டுமின்றி இந்தியா ஏன் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு பட்டியலிட முடியாத வெறுப்பு. அப்படி இருக்கும் போது தனது பதவி ஏற்பு விழாவுக்கு ராஜபக்சேவை அழைத்த மோடிக்கு எப்படி தமிழ் உணர்வும், தமிழர் மீது அன்பும் எப்படி பொங்கி வழியும்.