சென்னை: கனவு இல்ல திட்டத்தின் கீழ் 10 தமிழறிஞர்களுக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சி துறை சார்பில் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், சோ.தர்மராஜ், மா.ராமலிங்கம் என்கிற எழில் முதல்வன், பொன்.கோதண்டராமன், சு.வெங்கடேசன், ப.மருதநாயகம், முனைவர் இரா.கலைக்கோவன், எஸ்.ராமகிருஷ்ணன், ஆர்.என்.ஜோ. டி குருஸ், சி.கல்யாணசுந்தரம் (வண்ணதாசன்) ஆகிய 10 தமிழறிஞர்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு அரசாணைகளை வழங்கினார்.
மேலும், ம.ராசேந்திரன், இந்திரா பார்த்தசாரதி ஆகிய அறிஞர்களுக்கு குடியிருப்புக்கான நிர்வாக அனுமதி ஆணையையும் முதல்வர் வழங்கினார். செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் 2022ம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதை மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார். நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், துறை செயலாளர் சுப்பிரமணியன், இயக்குநர் வைத்திநாதன், தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் ஔவை அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.