சென்னை: தமிழக சட்டப்பேரவை செயலாளர் கி.சீனிவாசனின் பதவி 3 ஆண்டுகள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை செயலாளராக இருந்த பூபதி ஓய்வு பெற்றதை அடுத்து கி.சீனிவாசன் பேரவை செயலாளராக கடந்த 2018 மார்ச்சில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் சீனிவாசன் பதவிக்காலம் நேற்றுடன் (நவம்பர் 30) முடிவடைந்தது. இதையடுத்து தமிழக அரசு அவரது பதவிக்காலத்தை மேலும் நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில், ”சட்டப்பேரவை செயலாளர் கி.சீனிவாசன் இன்று (நேற்று) ஓய்வு பெறவிருந்த நிலையில் அவருக்கு முதன்மை செயலாளராக பதவி உயர்வுடன் மூன்று ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது\” என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று முகாம் அலுவலகத்தில் சட்டப்பேரவை செயலாளர் கி.சீனிவாசன் சந்தித்து பணி நீட்டிப்பு, முதன்மை செயலாளராக பதவி உயர்வு வழங்கியமைக்காக நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார்.