சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்பு துறையின் ‘தமிழரசு’ சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு’ (தமிழ் நூல்) மற்றும் `Tamil Nadu’s Contribution to the Freedom Struggle (ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்) ஆகிய சிறப்பு மலர்களை வெளியிட, மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி பெற்றுக் கொண்டார். தமிழ்நாட்டு தியாகிகளை போற்றி பெருமைப்படுத்தும் வகையிலும், விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு குறித்த ஆவணத்தினை தயார்செய்ய, சென்னை லயோலா கல்லூரி முன்னாள் தலைவர் டாக்டர் பெர்னாட் டி சாமி தலைமையில், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் வரலாற்று பேராசிரியர் ஆ.இரா.வெங்கடாசலபதி, தமிழ்நாடு பாடநூல் கழக இணை இயக்குநர் சங்கர சரவணன், எழுத்தாளர் ஸ்டாலின் குணசேகரன், தமிழ்நாடு ஆவண காப்பக ஆய்வு அதிகாரி விஜயராஜா ஆகியோர் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாகவும், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பேராசிரியர் என்.தனலட்சுமி, ஸ்டெல்லா மேரி கல்லூரி உதவி பேராசிரியர் சிந்தியா ஜுட், லயோலா கல்லூரி உதவி பேராசிரியர் ஏ.அற்புதச்செல்வி, லயோலா கல்லூரி இணை பேராசிரியர் எல்.செல்வநாதன், லயோலா கல்லூரி உதவி பேராசிரியர் சேவியர், சென்னை கிறிஸ்தவ கல்லூரி உதவி பேராசிரியர் கே.அசோக், ராஜபாளையம், ராஜுஸ் கல்லூரி முன்னாள் முதல்வர் வி.வெங்கட்ராமன், அழகப்பா கல்லூரி உதவி பேராசிரியர் டி.பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு மெய்நிகர் பல்கலைக்கழக ஆய்வாளர் செந்தில்குமரன் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை இணை இயக்குநர் அண்ணா ஆகிய பிற உறுப்பினர்களை கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு, சிறப்பு மலர் தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு மலரில், அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் சி.நடராஜன் எழுதிய ‘தமிழ்நாட்டில் சுதந்திர போராட்டத்தின் சுருக்கமான வரலாறு’, பஞ்சாப்- இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ராஜேஷ் வெங்கட சுப்பிரமணியன் எழுதிய ‘இந்திய தேசிய வாதமும், சங்க தமிழ் இலக்கியமும்’, , ராஜபாளையம் ராஜுஸ் கல்லூரி இணை பேராசிரியர் கே.ராஜேஷ் குமார் எழுதிய ‘தமிழ்நாட்டில் விவசாயிகள் எழுச்சி (1920-1947)’, சிக்கிம் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் வி.கிருஷ்ணா, எழுத்தாளர் தியோடர் பாஸ்கரன் எழுதிய “சுதந்திர போராட்டமும், தமிழ்நாட்டின் வெள்ளித்திரையும்”, சென்னை தியாகராய கல்லூரி முன்னாள் தலைவர் எஸ்.என்.நாகேஸ்வரராவ் எழுதிய ‘இந்தியாவுடன் இணைதல்; புலம்பெயர் தமிழர்களும் இந்திய சுதந்திர போராட்டமும்’, ராணிப்பேட்டை அப்துல் ஹக்கிம் கல்லூரி உதவி பேராசிரியர் முகமது ஹாசன் எழுதிய ‘அரசியல் உரை மற்றும் தேசியவாத கதைகள்; காலனித்துவ தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட புத்தகங்கள்’ உள்ளிட்ட பல்வேறு கட்டுரைகள் இச்சிறப்பு மலரில் இடம்பெற்றுள்ளன.