சென்னை: 2024 ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி கடந்த 12ம் தேதி கவர்னர் உரையுடன் சட்டப்பேரவை முதல் கூட்டம் தொடங்கியது. கவர்னர் ஆர்.என். ரவி தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்ததால், சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்த உரை அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது. கடந்த 13 மற்றும் 14ம் தேதிகளில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. கடந்த 15ம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
இதைத் தொடர்ந்து 2024-2025ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் பிப்ரவரி 19ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது . நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஏராளமான புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். தொடர்ந்து கடந்த 20ம் தேதி 2024-25ம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. நிறைவு நாளில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வரும் நிலையில் சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை கூறிவருகிறார், அதில்
பட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை
அரசுக்கு மாபெரும் தமிழ்க்கனவு உள்ளது; அதனை கருத்தில் கொண்டுதான் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் சமூக நீதி பிரதிபலிக்கிறது. மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்துக்கு ரூ.3,050 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கட்டணமில்லா பேருந்து பயணம்-ரூ.900 சேமிப்பு
கட்டணமில்லா பேருந்து பயணத்தின் மூலம் தமிழ்நாடு மகளிர் ஒவ்வொரு மாதமும் ரூ.900 சேமிக்கின்றனர். கிராம சாலைகள் திட்டத்தை தமிழ்நாடு அரசு தனது சொந்த செலவில் செயல்படுத்துகிறது.
ஒன்றிய அரசு எந்த நிதியும் தரவில்லை
வெள்ள நிவாரணமாக ஒன்றிய அரசு இதுவரை எந்த நிதியும் தரவில்லை. ஒன்றிய அரசு திட்டங்களின் பெயர்கள் பெரிதாக இருக்கிறதே தவிர, தமிழ்நாட்டுக்கு எந்த நிதியும் தரவில்லை.
ஒன்றிய அரசு பாரபட்சம்
குஜராத் வெல்ல பாதிப்புக்கு அள்ளிக் கொடுக்கும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு மட்டும் பாரபட்சம் காட்டுகிறது. தமிழ்நாட்டு மக்கள் திராவிட மாடல் அரசுக்கு ஆதரவளிப்பதால் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுகிறது.
வெள்ள நிவாரண நிதியை வழங்கும் என நம்புகிறேன்
குஜராத் முதல்வராக இருந்தபோது மாநில உரிமைக்காக பேசிய மோடி, இப்போது மாநில உரிமைகளை மதிப்பதில்லை. பிரதமர் தூத்துகுடிக்கு வருவதற்கு முன்பே ஒன்றிய அரசு வெள்ள நிவாரண நிதியை வழங்கும் என நம்புகிறேன். ஒன்றிய அரசு 30% மட்டுமே நிதி அளிக்கிறது; ஆனால் பெயருக்கு மட்டும் பிரதமர் வீடு கட்டும் திட்டம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.