வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி பொருட்களை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகை மாவட்டம் அருகாட்டுதுறை பகுதியை சேர்ந்த 9 மீனவர்கள் கோடியக்கரை தென்கிழக்கு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு இரண்டு பைபர் படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 6 பேர் தமிழ்நாட்டு மீனவர்களை சரமாரியாக தாக்கினர்.
மேலும் ஆயுதங்களை காட்டி மிரட்டிய அவர்கள் மீனவர்கள் படகிலிருந்து 4 செல்போன்கள், 3 ஜி.பி.எஸ் கருவிகள் 200 கிலோ மீன் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இலங்கை கடற்கொள்ளையர்களால் விரட்டியடிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் அருகாட்டுதுறை கடற்கரைக்கு வந்து சேர அவர்களிடம் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர காவல்படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டுழியத்தால் வேதாரண்யம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல அச்சமடைந்துள்ளனர். இது தொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.