தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி, 2வது மண்டல அலுவலகத்தில் மண்டலக்குழு கூட்டம் தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மண்டலத்துக்கு உட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் அவர்களது வார்டுகளுக்குத் தேவையான பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.இந்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என மண்டலக்குழு தலைவர் உறுதியளித்தார். 2வது மண்டலத்தில் பல்வேறு வகையான பழைய மின் விளக்குகளை அகற்றிவிட்டு 20, 70, 120, 200 வாட்ஸ் திறன் கொண்ட புதிய எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இவ்விளக்குகளை ஆன் மற்றும் ஆப் செய்ய தானியங்கி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நகரில் புதிதாக அபிவிருத்தி அடைந்த பகுதிகள், மின் வாரியத்தால் புதிதாக அமைக்கப்பட்ட மின் கம்பங்களில், விளக்கு இல்லாத கம்பங்களில் 187 எல்இடி விளக்குகள் பொருத்துவதற்கான தீர்மானம் இதில் நிறைவேற்றப்பட்டது. மேலும் சாலை, மழைநீர் கால்வாய், சிறுபாலம், தண்ணீர் தொட்டி அமைத்தல், பூங்கா மற்றும் பாதாள சாக்கடை திட்ட பராமரிப்பு என ரூ.2 கோடி மதிப்பிலான 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.