பெரம்பூர்: சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர். குறிப்பாக புளியந்தோப்பு, வியாசர்பாடி உள்ளிட்ட வடசென்னை பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டன. குறிப்பிட்ட இடங்களில் தண்ணீர் முழுமையாக வெளியேற 3 நாட்கள் வரை ஆனது. இதனையடுத்து அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே வேளையில் புளியந்தோப்பு காவலர் குடியிருப்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காவலர் குடும்பங்களுக்கு புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுமார் 130 குடும்பங்களுக்கு பல்வேறு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் புளியந்தோப்பு உதவி கமிஷனர் அழகேசன் உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.