தமிழ்நாடு அரசின் 2023-24ம் ஆண்டிற்கான கூடுதல் செலவுக்கான துணை மானிய கோரிக்கை மீதான விவாதம் பின்வருமாறு: நாகப்பட்டினம் முகமது ஷாநவாஸ் (விசிக): பீகாரை போல தமிழகம் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் குழு மூலம் அளிக்கப்படும் அறிக்கையை விரைந்து பெற்று பள்ளிகளில் சமூக நீதி மற்றும் சமத்துவ சிந்தனைகளை வளர்த்தெடுப்பதற்கு சாதிய ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கு சட்டம் இயற்ற வேண்டும்.
திருத்துறைப்பூண்டி மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்): விவசாயிகளின் நலன் காக்க அரசே பயிர் காப்பீட்டு திட்டத்தை ஏற்று நடத்த வேண்டும். எழும்பூர் பரந்தாமன் (திமுக): பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன், காவிரி விவகாரம் திமுக அரசின் இயலாமையை காட்டுவதாக பேசி இருந்தார். 2019ம் ஆண்டு பாஜ தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு பற்றி வாக்குறுதி கொடுத்துள்ளனர். பாஜ ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இன்னும் நதிகளை இணைக்கவில்லை என்றால் இயலாமை யாருக்கு? திமுகவிற்கா அல்லது பிரதமர் மோடிக்கா? காவிரி விவகாரத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் ஏன் அழுத்தம் தரவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டிருந்தார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு 2018ம் ஆண்டு வந்தது. அதே ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தவர் சந்திரபாபு நாயுடு. அப்போது அந்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க முடியாத அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் நாடாளுமன்றத்தை முடக்குகிற கபட நாடகத்தை ஆடி இன்றைக்கு துணிச்சலை பற்றி பேசுகின்றனர். இவ்வாறு விவாதம் நடந்தது.