ஹூவாலியன்: தைவானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 9 பேர் உயிரிழந்தனர்,934 பேர் படுகாயமடைந்தனர். தைவான் நாட்டின் தலைநகர் தைபேயில் இருந்து 160 கிமீ தொலைவில் ஹூவாலியன் என்ற நகரம் உள்ளது. தைவானின் தென் கிழக்கு கடற்கரை நகரமான இங்கு நேற்று காலை 8 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. சில கட்டிடங்கள் சரிந்து, வீடுகளில் இருந்த பொருள்கள் வெளியே விழுந்தன. டைல்ஸ்கள் உடைந்தன.
இதையடுத்து கட்டிடங்களில் இருந்தவர்கள், பள்ளி,கல்லூரிகளில் பயிலும் மாணவர்களை பத்திரமாக மீட்டு திறந்த வெளி மைதானங்களுக்கு கொண்டு வந்தனர். நிலநடுக்கத்தையடுத்து தைபேயில் உள்ள மெட்ரோ ரயில் சேவை உடனே நிறுத்தப்பட்டன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானது என்று தைவான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனால் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இது 7.4 என தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தில், 9 பேர் பலியாகினர். 934 பேர் படுகாயமடைந்தனர்.மேலும் நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த 70 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர் .