ராசிபுரத்தில் பாஜ மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது: எங்களை பொறுத்தவரை 39 தொகுதிகளிலும் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்கி விட்டோம். 27ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். அப்போது நாங்கள் தமிழக அரசியலில் எப்படி பயணிக்கிறோம். தேர்தல் வியூகங்கள் என்ன? எங்களுடன் கூட்டணியில் இருப்பவர்கள் யார்? என்ற அனைத்தும் திட்டவட்டமாக தெரிந்துவிடும். அதிமுக பாஜவுடன் கூட்டணி இல்லை என்றும், பாஜ, அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்றும் ஏற்கனவே அறிவித்தன. அதையும் மீறி பாஜவுடன் அதிமுக கூட்டணி வைத்தால், அவர்கள் எங்களுடன் கூட்டணிக்கு வந்தால் பாஜவின் தாமரை சின்னத்தில்தான் அவர்கள் போட்டியிட வேண்டும். இந்த தேர்தல் மோடி பிரதமரா? இல்லையா? என்ற இரு அணிகளுக்கு இடையே நடப்பதாகும்.
இதனால் எங்கள் கட்சி தொண்டர்கள் தாமரை சின்னத்திற்கு மட்டுமே ஓட்டு கேட்பார்கள். வேறு எந்த சின்னத்திற்கும் ஓட்டு கேட்டு அவர்களுக்கு ஆதாயம் தேடிக்ெகாடுக்க மாட்டோம். இவ்வாறு கே.பி.ராமலிங்கம் கூறினார். கூட்டணிக்காக பாமக, தேமுதிக உள்ளிட பல கட்சிகளை தேடி சென்று ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வரும் பாஜ, இதுவரை கூட்டணியை உறுதி செய்ய முடியாமல் திணறி வருகிறது. இந்த சூழலில் வேறு எந்த சின்னத்துக்கு ஓட்டு கேட்டு அவர்களுக்கு ஆதாயம் தேடிக் கொடுக்க மாட்டோம் என்று கே.பி.ராமலிங்கம் பேசி உள்ளதை கூட்டணி கட்சி தலைவர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.
* சபாநாயகர், விவசாயிகளை கேவலமாக பேசிய கே.பி.ராமலிங்கம்
கே.பி.ராமலிங்கம் கூறுகையில், ‘டெல்லியில் இப்போது விவசாயிகள் போராட்டம் நடத்த வேண்டிய அவசியமே இல்லை. போராடுபவர்கள் விவசாயிகளே அல்ல. அரசியலில் பரபரப்பை உருவாக்குவதற்காக, அங்கு ஏதாவது பிணம் விழுமா அல்லது சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படுமா என எதிர்கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்’ என்றார். இந்த பேட்டியின்போது, சட்டமன்றத்தில் ஆளுநர் உரையை படிக்காமல் சென்ற ஆளுநர் ரவியை குறிப்பிட்ட பேசிய சபாநாயகர் அப்பாவுவை கே.பி.ராமலிங்கம் மிகவும் கீழ்தரமாக ஒருமையில் கடுமையாக விமர்சித்திருந்தார்.