Friday, May 24, 2024
Home » கலைஞரின் பிறந்தநாளன்று சத்துணவில் இனிப்பு பொங்கல்

கலைஞரின் பிறந்தநாளன்று சத்துணவில் இனிப்பு பொங்கல்

by Karthik Yash

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானிய கோரிக்கை மீதான சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் பதிலளித்தார். பின்னர், பல்வேறு புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:

  • ரூ.25.70 கோடி செலவில் 17,312 அரசுப்பள்ளி சத்துணவு மையங்களுக்கு புதிய சமையல் உபகரணங்கள் வழங்கப்படும்.
  • சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் சத்துணவுத்திட்டம், உள்ளகப் புகார் குழுக்கள், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் ஆகியவற்றின் செயல்பாடுகளை துரிதப்படுத்தவும், கண்காணிக்கவும் ரூ.50 லட்சத்தில் இணையதள முகப்பு மற்றும் கைப்பேசி செயலிகள் உருவாக்கப்படும்.
  • சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் வழங்கும் திட்டத்தின் கீழ் நவீன உயர் ரக தையல் இயந்திரங்கள் வழங்கப்படும்.
  • முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மறுசீரமைக்கப்படும்.
  • குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரின் ஊட்டச்சத்து நிலையை, தொழில்நுட்பம் மூலம் நிகழ்நேர கண்காணிப்பினை மேற்கொள்வதற்காக, பழுதடைந்த 18,573 கைப்பேசிகளுக்கு மாற்றாக ரூ.9,440 மதிப்பில் புதிய திறன் கைப்பேசிகள் ரூ.17.53 கோடி செலவில் வழங்கப்படும்.
  • குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணிக்கும் வகையில் 18,573 குழந்தைகள் மையங்களுக்கு ரூ.14.85 கோடியில் வளர்ச்சி கண்காணிப்புக் கருவிகள் வழங்கப்படும்.
  • முன்னேற விழையும் மாவட்டங்களான ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 700 குழந்தைகள் மையங்களுக்கு கற்றல் திறன்களை ஊக்கப்படுத்துவதற்கு எல்.இ.டி தொலைக்காட்சி பெட்டிகள் ஒரு மையத்திற்கு ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.1.75 கோடியில் வழங்கப்படும்.
  • குழந்தைகள் மையங்களில் சமையலுக்கு தேவைப்படும் மளிகை பொருட்கள் மற்றும் எரிவாயு உருளைகள் அரசு மற்றும் கூட்டுறவு அமைப்புகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு அனைத்து குழந்தைகள் மையங்களுக்கும் நேரடியாக விநியோகம் செய்யப்படும்.
  • சத்துணவு திட்டத்தில் பயனடைந்து வரும் குழந்தைகளுக்கு, கலைஞரின் பிறந்த நாளன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படும்.
  • பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள் குறித்த தரவுகளை சேமிக்கும் நிகழ்நேர கைப்பேசி செயலி மூலம் ஆய்வு மற்றும் கண்காணிப்பு, ரூ.1 கோடியில் மேற்கொள்ளப்படும்.
  • குழந்தை பராமரிப்பு நிறுவனங்கள், மகளிர் காப்பகங்களில் மன ரீதியில் மாற்றங்கள் ஏற்படுத்துவதற்கு உரிய பயிற்சிகள், தேவையின் அடிப்படையில் ரூ.1 கோடி செலவில் வழங்கப்படும்.
  • பாலியல் குற்றங்கள் அல்லாத பிற துன்புறுத்தல்கள் மற்றும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு ரூ.50 லட்சம் நிதித் தொகுப்பு உருவாக்கப்படும்.
  • திருச்சி, கோவை மற்றும் சென்னையில் குழந்தைகளுக்கான போதை தடுப்பு மையங்கள் ரூ.1.14 கோடியில் அமைக்கப்படும்.
  • தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை அரசு குழந்தைகள் இல்லம் மற்றும் சென்னை மாவட்டம், ராயபுரம் சிறுவருக்கான அரசு குழந்தைகள் இல்லம் ஆகியவற்றில் ரூ.7 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.
  • சென்னை, சிறுமியருக்கான அரசினர் குழந்தைகள் இல்லம், நெல்லை, சென்னை மற்றும் மதுரை அரசினர் கூர்நோக்கு இல்லங்களில், பணியாளர் குடியிருப்பு ரூ.10 கோடி செலவில் கட்டப்படும்.

You may also like

Leave a Comment

three + 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi