Friday, May 17, 2024
Home » அறுவை சிகிச்சை மூலம் பாலினம் மாறுபவர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு டாக்டர் சான்றிதழ் தந்தாலே போதும்: சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

அறுவை சிகிச்சை மூலம் பாலினம் மாறுபவர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு டாக்டர் சான்றிதழ் தந்தாலே போதும்: சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

by Karthik Yash

சென்னை: அறுவை சிகிச்சை மூலம் பாலினம் மாறியவர்கள் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும்போது டாக்டரின் சான்றிதழ் தந்தாலே போதுமானது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அறுவை சிகிச்சை மூலம் 3ம் பாலினத்தவராக மாறுபவர்கள் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும்போது, அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனை சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என்று பாஸ்போர்ட் விதியில் உள்ளது. இதை எதிர்த்து மயிலாப்பூரை சேர்ந்த சிவக்குமார் என்ற அரசு சாரா அமைப்பை சேர்ந்தவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.

மனுவில், அறுவை சிகிச்சை மூலம் மூன்றாம் பாலினத்தவராக மாறுபவர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு அவர்கள் மருத்துவமனையின் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். ஆணாக பிறந்த சென்னையை சேர்ந்த ஒருவர் பெண்ணுக்குரிய தன்மை தன்னிடம் உள்ளது என்று தெரிந்தவுடன் பெண்ணாக மாறுவதற்காக ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த 2007ல் அறுவை சிகிச்சை செய்துள்ளார். அவருக்கு 3ம் பாலினத்தவர் நல வாரியத்தின் அடையாள அட்டை உள்ளது. ஆதாரிலும் அவர் 3ம் பாலினத்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தபோது அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனையின் சான்றிதழ் இணைக்காததால் அவரது விண்ணப்பம் பரிசீலிக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ளது.

கடப்பாவில் அவர் அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனை தற்போது இல்லை. இதையடுத்து, சென்னை கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவரிடம் சான்றிதழை அவர் தாக்கல் செய்தும் அவரது பாஸ்போர்ட் விண்ணப்பம் பரிசீலிக்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளதால் பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் பாலின மாற்று அறுவை சிகிச்சை சான்றிதழை இணைக்க கோரும் பிரிவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய அரசு வழக்கறிஞர் வி.சந்திரசேகரன் ஆஜராகி, இயற்கையிலேயே 3ம் பாலினத்தவராக இருந்தால் அவருக்கு இந்த விதி பொருந்தாது.

அதே நே ரத்தில் அறுவை சிகிச்சை மூலம் பாலினம் மாறும் 3ம் பாலினத்தவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனையின் சான்றிதழ் கட்டாயம். இது குறித்து உரிய விளக்கம் பெற்று தெரிவிக்கிறேன் என்றார். இதையடுத்து, ஒன்றிய அரசிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஏப்ரல் 29ம் தேதிக்கு தள்ளிவைத்திருந்தனர். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசு வழக்கறிஞர் வி.சந்திரசேகரன் ஆஜராகி, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எந்த விதி கடைபிடிக்கப்படுகிறதோ அதே விதி பாலின மாற்று அறுவை செய்தவர்களுக்கும் பொருந்தும். மருத்து சான்றிதழை சமர்ப்பித்தாலே போதுமானது என்றார். இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

You may also like

Leave a Comment

two × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi