தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெருகிவரும் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில், நாய்கள் பிடிக்கப்பட்டு, வாகனங்கள் மூலம் அனகாபுத்தூர், பாரதிபுரம் மற்றும் குண்டுமேடு ஆகிய பகுதிகளில் உள்ள இனக்கட்டுப்பாடு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, கால்நடை மருத்துவர்களால் இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக, 22.10.2023 முதல் 26.11.2023 வரை 141 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு, அதில் 139 நாய்களுக்கு இனக்கட்டுப்பாடு மையத்தில் கால்நடை மருத்துவ குழுவினரால் இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிகிச்சை முடிந்து 5 நாட்கள் வரை பராமரிக்கப்பட்டு, உடல் தகுதி பெற்ற பின் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசியும் போடப்பட்டு பிறகு பிடித்த இடத்திலேயே விடப்பட்டுள்ளது, என தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.