சென்னை: ஆவடி மாநகராட்சியில் உள்ள பிரதான சாலை சேறும், சகதியுமாக இருப்பதாக சன் நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வெளியான உடனேயே இரவோடு இரவாக அந்த சாலையில் சீரமைப்பு பணிகள் முடிவுற்று போக்குவரத்து சீராகியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே, சென்னையில் சாலை சீரமைப்பு பணி, மழைநீர் வடிகால் பணி முடிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அந்த அடிப்படையில் சென்னையில் உள்ள பிரதான சாலைகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், சென்னையை அடுத்த ஆவடி 37வது வார்டில் உள்ள தண்டூரி முதல் சேக்காடு வரை உள்ள பிரதான சாலை 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதில் 3 கிலோ மீட்டர் அளவுக்கு சாலை பணிகள் முடிவுற்ற நிலையில், எஞ்சிய 2 கிலோ மீட்டர் சாலை பணிகள் முடிவுறாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் அந்த சாலை சேரும் சகதியுமாக மாறியதால் அவ்வழியாக செல்லும் பாத சாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள், மேடு பள்ளம் உள்ள சாலையை கடக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இது தொடர்பாக சன் நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வெளியான நிலையில், அந்த சாலையை உடனடியாக சீரமைக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதையடுத்து இரவொரு இரவாக அந்த சாலையை சீரமைக்கும் பணியை ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். ஆவடி மாநகராட்சி ஆணையர் சயத் அப்துல் ரகுமான் இரவு 1 மணியளவில் நேரில் வந்து பணியை ஆய்வு செய்தார். சன் நியூஸ் செய்தி எதிரொலியாக சேக்காடு தந்தூரி சாலையை சீரமைக்க உத்தரவிட்ட முதலமைச்சருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.