Friday, May 17, 2024
Home » சன் ஸ்க்ரீன்

சன் ஸ்க்ரீன்

by Porselvi

எப்படி வயிற்றுக்கு உணவு முக்கியமோ அதே போல் சருமத்திற்கு மிக முக்கியம் சன் ஸ்கிரீன் என்கிறார் கிளினிக்கல் காஸ்மெட்டாலஜிஸ்ட் பூர்ணிமா. இந்தியா மாதிரியான வெப்ப நாடுகளில் பெண்களைப் பொறுத்தவரை வயதுக்கு வந்த உடனேயே சரும பராமரிப்பு ஆரம்பிச்சிடணும்.ஆனால் 30 வயதில் கூட எந்த மெனெக்கெடலும் இல்லாமல் நரைமுடி எட்டிப் பார்த்த பிறகுதான் பல பெண்கள் தங்களின் சருமத்தின் மேல் கவனம் செலுத்த ஆரம்பிக்கிறார்கள். அதே போல் ஆண்களும் 18 வயது நிரம்பியது முதல் சருமத்திற்கான பராமரிப்பை ஆரம்பிச்சிடணும். இதிலே சன் ஸ்கிரீன் மிகவும் முக்கியம். ஒவ்வொரு சருமத்திற்கும் அதன் குணத்திற்கேற்ப சன் ஸ்கிரீன் பயன்பாடு மாறுபடும். எந்த சருமத்திற்கு என்ன சன் ஸ்க்ரீன் பயன்படுத்தலாம் என்பது குறித்து விளக்குகிறார் பூர்ணிமா.

‘‘சருமத்தைப் பொறுத்தவரை மூன்று விதங்கள்தான். வறண்ட சருமம், எண்ணெய் சருமம், சென்சிடிவ் சருமம். ஒரு சிலர் சன் ஸ்கிரீன் போட்டால் என் சருமம் கருமையாகவும், எண்ணெய் வடிகிற மாதிரி இருப்பதாக சொல்வாங்க. முதல்ல உங்க சருமம் என்ன தன்மை கொண்டதுன்னு புரிந்து கொண்டு அதற்கேற்ற சன் ஸ்கிரீன்பயன்படுத்த வேண்டும்.சன் ஸ்கிரீன்கள் லோஷன், ஸ்டிக்ஸ், பட்டர், பேஸ்ட், ஸ்பிரே, ஜெல், கிரீம், லிக்விட் இப்படி நிறைய வெரைட்டி
களில் உண்டு. இதிலே லிக்விட், கிரீம் மாதிரியான சன் ஸ்கிரீன் எண்ணெய் சருமம் உள்ளவங்களுக்கு பொருந்தாது. இது மேலும் அவர்களின் சருமத்தில் அதிகப் படியான எண்ணெய் தன்மையை சுரக்கச் செய்து, பருக்கள் தோன்ற ஒரு காரணமாக அமையும். எண்ணெய் சருமம் உடையவர்கள், ஜெல் வகை சன் ஸ்கிரீன் தேர்வு செய்ய வேண்டும்.

வறண்ட சருமமா இருந்தால் கிரீம் அல்லது லிக்விட் பயன்படுத்தலாம். பொதுவாக சன் ஸ்கிரீன் என்பது, சூரிய ஒளியில் இருந்து மட்டுமில்லாமல் அலுவலகத்தில் வேலை பார்க்கும் இடத்தில் உள்ள பளிச் விளக்குகளின் ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் கவசமாகும். இது சருமத்தின் மேல் படர்வதால், வறண்ட சருமம் கொண்ட ஒரு சிலருக்கு மேலும் அவர்களின் சருமத்தை வறட்சியாக்கும்.மேலும் பருக்கள் தோன்ற காரணமாகும். இதைத் தவிர்க்க வறண்ட சருமம் உள்ளவர்கள் சன் ஸ்கிரீன் பயன்படுத்துவதற்கு முன் சருமத்தில் மாய்ச்சுரைஸர் பயன்படுத்தலாம். அதன் பிறகு ஐந்து நிமிடம் கழித்து சன்ஸ்கிரீன் போடலாம். அதே போல் வெளியே கிளம்புவதற்கு 125 நிமிடம் முன் சன்ஸ்கிரீன் போட வேண்டும்’’ என்னும் பூர்ணிமா SPF விவரங்கள் குறித்து பேசினார்.

‘‘SPF (Sun Protection Factor)… சருமத்துக்கான சூரிய ஒளி பாதுகாப்புக்கான அளவீடுதான் SPF. SPF 10 துவங்கி அதனுடைய பாதுகாக்கும் தன்மையைப் பொருத்து அதிகரிக்கும். காரிலேயே போய், ஏசியிலேயே இருப்போருக்கு 10, 15, போதும்.ஆனால் அடிப்படையிலேயே இந்தியா மாதிரியான வெப்ப நாடுகள்ல குறைஞ்சது SPF 30 அளவேனும் இருக்கற மாதிரி சன் ஸ்கிரீன் தேர்வு இருக்கணும். ஒருவேளை நீங்க மார்க்கெட்டிங் மாதிரியான வெளியே சுற்றித் திரிகிற வேலையிலே இருந்தா நிச்சயம் SPF 30க்கு மேலே இருக்கற சன் ஸ்கிரீன் பயன்பாடு அவசியம்’’ என்றவர் சன் ஸ்கிரீன் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை என்னென்ன என்று தொடர்ந்து பேசினார் பூர்ணிமா.

‘‘முதல்ல நம்ம சருமம் என்ன வகை, அடுத்து சென்சிட்டிவ்வா இருந்தா அதற்கான மாய்ச்சுரைசர், போலவே நாம் வெளியில் இருக்கும் நேரம் இது அத்தனையும் பார்த்துதான் சன் ஸ்கிரீன் வாங்கணும். அடுத்து உங்க சருமத்துக்கு என்ன சன் ஸ்கிரீன் நல்லதுன்னு தகுந்த நிபுணர்கள் கிட்ட கேட்டு வாங்கணும்.

சும்மா கூகுள்ல படிச்சிட்டு, ஆன்லைன்ல ஆர்டர் செய்யக்கூடாது. குறிப்பா மருந்துக் கடைகளில் கிடைக்கும் சன் ஸ்கிரீன்கள்லதான் விவரங்கள் முழுமையா இருக்கும். பிராண்டுகளுக்கு அடிமையாகாம பட்ஜெட்டில் நல்ல சன் ஸ்கிரீன் எதுன்னு பார்த்து மெடிக்கல் ஷாப்கள்ல மட்டுமே கிடைக்கற சன் ஸ்கிரீன் பயன்படுத்துங்க.இப்போ மழை மற்றும் குளிர்காலம். வெயிலே இல்லையே எனக்கெதுக்கு சன் ஸ்கிரீன் அப்படின்னு கேட்கக்கூடாது. வீட்டுக்குள்ளேயே இருந்தா கூட மொபைல், லேப்டாப், கம்ப்யூட்டர் இப்படி எல்லா எலெக்ட்ரானிக் ஐட்டங்களும் கூட நம்ம சருமத்தை பாதிக்கற கதிர்களையும், வெப்பத்தையும் வெளியிடும்.லாக்டவுன் நாட்கள்ல நிறைய பேர் சருமப் பிரச்னைக்கு ஆளானதுக்குக் காரணம் லேப்டாப், டிவி, மொபைல், கம்ப்யூட்டர் இப்படி அதிக பயன்பாடுதான். வீட்டிலேயே இருந்தாலும் சரி சன் ஸ்கிரீன் அத்தியாவசியம். சன் ஸ்கிரீனுக்கு மேலே கூட நீங்க எந்த மேக்கப்பும் போட்டுக்கலாம். காஸ்மெட்டிக், மேக்கப் ஐட்டங்கள் உண்டாக்குற அலர்ஜிகள்ல இருந்து கூட சன் ஸ்கிரீன் ஒரு மாஸ்க் மாதிரி பாதுகாக்கும்’’ என்று ஆலோசனை வழங்கினார் பூர்ணிமா.

– ஷாலினி நியூட்டன்

You may also like

Leave a Comment

3 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi