Sunday, September 1, 2024
Home » தென்கனரா மாவட்டத்தில்: கோடைக்காலம் வருவதற்கு முன்பே தண்ணீர் வரத்து நிறுத்தம்

தென்கனரா மாவட்டத்தில்: கோடைக்காலம் வருவதற்கு முன்பே தண்ணீர் வரத்து நிறுத்தம்

by Dhanush Kumar

தென்கனரா: தென்கனரா மாவட்டத்தில் கோடைகாலம் வருவதற்கு முன்பே தண்ணீர் வரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். இதனை தீர்க்க, அரசு உடனடியாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. தட்சிண கன்னடா மாவட்டத்தின் ஜீவ நதிகளான நேத்ராவதி, பல்குனி, நந்தினி, ஷாம்பவி ஆகிய நதிகளில் இருந்து கோடைகாலம் துவங்கும் முன்னரே நீர்வரத்து நின்று விட்டது. இதனால் நகர் பகுதிகள் மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள பல நகரங்களின் வார்டுகளிலும் பிப்ரவரி மாதமே டேங்கர் மூலம் தண்ணீர் விநியோகம் தொடங்கியுள்ளது. அடுத்த 3 மாதங்களில் வறட்சியான கோடை காலத்தில் மாவட்டத்தில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடும் என பொதுமக்கள் புலம்புகின்றனர்.

கடந்தாண்டு, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகத்திற்கு, கிடங்குகள் துவங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நீர்த்தேக்கத்தில் இருந்து வரும் தண்ணீரை பயன்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டதால், ஜூன் 2வது வாரம் வரை மாநகராட்சி மூலம் தண்ணீர் வினியோகம் செய்ய முடிந்தது. பின்னர், மழை பெய்ததால், மாநகராட்சியின் பெரும் கவலை தணிந்தது. தொடர்ந்து, டிசம்பர் மாதம் வரை தொடர் மழை பெய்ததால் இந்த கோடையில் குடிநீர் பிரச்னை ஏற்படவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மாவட்ட மக்கள் கூறும் அளவுக்கு தற்பேதைய நிலைமை அவ்வளவு எளிதல்ல. மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை. மறுபுறம், கிராமங்களில் கூட பள்ளங்கள் வறண்டுவிட்டன. கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தவுடன், அடிமட்டத்தை அடைகிறது. குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. மாநிலத்தில் அதிக மழை பெய்யும் மாவட்டங்களில் ஒன்றான தட்சிணகன்னடா, நீர்த்தேக்கங்கள் மற்றும் கிணறுகளில் இருந்து தண்ணீரை தீவிரமாக பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையை எதிர்கொள்கிறது.

மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரங்களான தும்பே அணை, ஏஎம்ஆர் அணை, ஹரேகலா-அடையார் அணை, பிலியூர் அணை, நெக்கிலடி அணை ஆகியவை தற்போது நிரம்பியுள்ளன. ஆனால், இம்முறையும் நம்பிக்கை அளிக்கும் சூழல் இல்லை. வரத்து குறைந்து வருவதே இந்த கவலைக்கு காரணம். கிராமப்புறங்களில் உள்ள 39 கிராமங்களிலும், நகர்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள 112 வார்டுகளிலும் வரும் மாதங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக மாவட்ட நிர்வாகம் கண்டறிந்துள்ளது. மங்களூரு நகரின் உயரமான பகுதிகளில் குடிநீர் பிரச்னை கடுமையாக உள்ளது. மாநகராட்சி ஏற்கனவே 15 டேங்கர்கள் மூலம் தண்ணீர் சப்ளை செய்து வருகிறது. சூரத்கல், மேரிஹில், கோட்டாரா, கூளூர் என நகரின் பல இடங்களில் பிப்ரவரி மாதத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் உள்ள வார்டுகளுக்கு டேங்கர் மூலம் தண்ணீர் வழங்க மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது.

தும்பே நீர்த்தேக்கத்துக்கு வரும் நீர்வரத்து 2023 மார்ச் 3ம் தேதி நிறுத்தப்பட்டது. இந்த அணையில் அதிகபட்சமாக 7 மீட்டர் வரை தண்ணீர் தேக்க அனுமதிக்கப்பட்டுள்ளது, ஆனால் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்னையால் 6 மீட்டர் தண்ணீர் மட்டுமே தேக்கி வைக்கப்படுகிறது. கடந்தாண்டு ஏப்ரலில் நீர்மட்டம் 4 மீட்டருக்கும் குறைவாகவே இருந்தது. அதன் பிறகு 20 நாட்களுக்கு போதுமான தண்ணீர் மட்டுமே கிடைக்கும். அப்போது ஏஎம்ஆர் நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் வெளியேற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதன்பேடி, ஏஎம்ஆர் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டதால், பண்ட்வாலா தாலுகாவில் உள்ள சில கிராமங்களில், குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தாண்டு அவ்வாறான நிலை ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், முடிந்தவரை தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். முல்கி நகர பஞ்சாயத்து பகுதிக்கு தும்லா நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது. இங்கு ஏற்கனவே டேங்கர் தண்ணீரை நம்பியிருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. கோட்டேகர் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 11 வார்டுகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அத்தகைய வார்டுகளுக்கு டேங்கர் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. முடிப்புக்கு உட்பட்ட பலேபுணி கிராம பஞ்சாயத்து, ஆசைகோலி, ஹரேகல பகுதிகளிலும் ஏற்கனவே குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்படும் சில நீர்நிலைகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால், இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான வழிகள் குறித்தும் திஷா கமிட்டி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தற்போது கடுமையான குடிநீர் தட்டுப்பாடு இல்லை. மார்ச் மாதத்துக்கு பிறகு குடிநீர் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என்றனர்.

* அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

குடிநீர் தட்டுப்பாடு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய கலெக்டர் முல்லை முகிலன், கடந்தாண்டு ஏற்பட்ட கடும் குடிநீர் தட்டுப்பாட்டில் பாடம் கற்றுக் கொண்ட மாவட்ட நிர்வாகம், இம்முறை தண்ணீர் பயன்பாட்டுக்கு திட்டம் வகுத்துள்ளது. நீர்த்தேக்கங்களில் உள்ள நீர்மட்டத்தை கண்காணித்து, தண்ணீரை திறம்பட பயன்படுத்துவதை உறுதிசெய்ய அணை மேலாண்மை மேற்பார்வை குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு தினமும் தகவல் அளிக்க வேண்டும். தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, அதிகாரிகள் வயல்களை பார்வையிட்டு, கிடைக்கும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் பிரச்னை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பேற்க நேரிடும் என்று அதிகாரிகளை எச்சரித்தார்.

* விதிகளை மீறியபம்ப் செட் இணைப்பு துண்டிப்பு

குடிநீர் தட்டுப்பாடு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய கலெக்டர் முல்லை முகிலன், பிலியூர் அணையின் தண்ணீரை முழுமையாக ஒதுக்க வேண்டும். புச்சமோகர், ஜக்ரிபெட்டு அணை கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மாவட்டத்தின் நேத்ராவதி, ஏஎம்ஆர் அணைகள் மற்றும் ஆறுகளில் விதிமீறி அமைக்கப்பட்டுள்ள பம்ப் செட்டுகளுக்கான மின் இணைப்பை துண்டிக்கவும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

* நடவடிக்கைக்கு உத்தரவு

குடிநீர் தட்டுப்பாடு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய கலெக்டர் முல்லை முகிலன், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் பிரச்னையை சமாளிக்க ஹெல்ப்லைன் துவங்கி, தேவையான பணியாளர்களை நியமிக்க வேண்டும். குடிநீரின் தூய்மை மற்றும் தரத்தை சரிபார்க்க வேண்டும். கடுமையான குடிநீர் பிரச்னை உள்ள பகுதிகள் மற்றும் கிராமங்களை கண்டறிய வேண்டும். நீர் விநியோகத்திற்கான மாற்று ஆதாரங்கள் கண்டறிய வேண்டும். குடிநீர் பிரச்னை ஏற்பட்டால், டேங்கர் மூலம் தண்ணீர் வழங்க டெண்டர் அழைத்து ஏற்பாடு செய்ய வேண்டும். புதிதாக ஆழ்துளை கிணறுகள் தோண்ட வேண்டிய இடங்களை கண்டறிய வேண்டும். தேவைப்பட்டால் தனியார் போர்வெல் மூலம் தண்ணீர் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

You may also like

Leave a Comment

eight − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi