Wednesday, May 15, 2024
Home » கோடை சீசன் துவங்கும் நிலையில் ஊட்டியில் ஆதாம் நீரூற்று சீரமைக்கும் பணி தீவிரம்

கோடை சீசன் துவங்கும் நிலையில் ஊட்டியில் ஆதாம் நீரூற்று சீரமைக்கும் பணி தீவிரம்

by Lakshmipathi

ஊட்டி : கோடை சீசன் துவங்கும் நிலையில் ஊட்டி நகரின் மையப்பகுதியில் உள்ள பழமை வாய்ந்த ஆதாம் நீரூற்று சீரமைக்கும் பணிகளை நகராட்சி நிர்வாகம் துவக்கி உள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இருப்பினும், கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

சமவெளிப் பகுதிகளில் இந்த இரு மாதங்களில் வெயில் வாட்டும் நிலையில், குளு குளு சீசனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டி வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு இவ்விரு மாதங்களும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக, தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை மூலம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மேலும், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில், தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் புதுப்பிக்கப்படும்.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் காரணமாக மே மாதத்தில் நடைபெறும் காய்கறி கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, ரோஜா கண்காட்சி போன்றவைகள் நடத்துவது தொடர்பான தேதிகள் முடிவு செய்யப்படவில்லை. மலர் கண்காட்சி மற்றும் பழக்கண்காட்சிக்கான தேதிகள் மட்டும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் ஊட்டி நகரை பொலிவுப்படுத்தும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

ஊட்டி நகரின் மையப்பகுதியில் உள்ள பழமை வாய்ந்த ஆதாம் நீருற்று உள்ளது. இந்த நீரூற்று அருகே நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துச் செல்வது வழக்கம். கோடை சீசன் துவங்கும் நிலையில், தற்போது ஆதாம் நீரூற்று சீரமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. நீருற்றில் தற்போது வர்ணம் பூசும் பணிகள் நடந்து வருகின்றன.

மேலும், நீருற்றை சுற்றியுள்ள பூங்கா மற்றும் குளத்தை சீரமைக்கும் பணிகளும் துவக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதம் முதல் இரவு நேரங்களில் இந்த நீருற்றில் தண்ணீர் விழும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

2 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi