Monday, May 13, 2024
Home » கோடை கால ஆரோக்கியமும் உணவு முறைகளும்!

கோடை கால ஆரோக்கியமும் உணவு முறைகளும்!

by Nithya

நன்றி குங்குமம் தோழி

கோடை காலம் என்றாலே அதிக வெப்பத்தின் காரணமாக உடல் மற்றும் சரும ரீதியாக பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். எனவே இந்தக் காலகட்டத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் அவசியம். அதிக வெப்பம் மற்றும் வெப்பத்தால் ஏற்படும் சோர்வு ஆகியவை வெப்ப பக்கவாதத்திற்கு வழிவகுக்கும். இதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால், அதனால் மிகுந்த ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த கோடை காலத்தில் நோய் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது குறித்து ஆலோசனைகளை வழங்குகிறார் டாக்டர் அஸ்வின் கருப்பன்.

வெப்பம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும் வழிகள்

உடல் தன்னைத் தானே குளிர்ச்சியை ஏற்படுத்திக் கொள்ள முடியாத போது சோர்வு, தலைசுற்றல், குமட்டல் போன்ற அறிகுறிகள் வெளிப்படும். அப்போது வெப்பம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. வெப்பத்தால் ஏற்படும் சோர்வு மற்றும் பக்கவாதம் போன்றவற்றை தடுக்க கீழ் குறிப்பிட்டவற்றை பின்பற்றினால் அவ்வாறு ஏற்படாமல் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

*கடுமையான வெயில் கொளுத்தும் நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்லாமல் வீட்டில் இருப்பது நல்லது.

*உடலின் மீது காற்று படும்படியான வெளிர் நிறமுள்ள மற்றும் உடலை பிடித்து இறுக்காத ஆடைகளை அணிய வேண்டும்.

*வண்டிகளில் செல்பவர்கள் அடிக்கடி நிழல் உள்ள பகுதிகளில் சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்.

*மது மற்றும் காபி போன்றவற்றை தவிர்த்துவிட்டு அதிக அளவில் தண்ணீர் குடிக்கும்போது அது நமது உடலில் வறட்சி ஏற்படுத்தாமல் பாதுகாக்கும்.

*வெயில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அதிக எஸ்.பி.எப் கொண்ட சன் ஸ்கிரீன் லோஷனை பயன்படுத்துங்கள். இது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

*வீட்டில் இருக்கும்போது மின்விசிறி அல்லது ஏசியை பயன்படுத்துங்கள்.

கோடை காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்

கோடை காலங்களில் ஆரோக்கியமான மற்றும் சீரான உணவை எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியமாகும். நீங்கள் ஆரோக்கியமாக இருக்க உங்களுக்கான உணவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

*வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகமுள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடும்போது அது, உங்கள் உடலை வறட்சி இல்லாமல் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். அதற்கு நீங்கள் தர்பூசணி மற்றும் திராட்சை போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையும், வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி போன்ற காய்கறிகளையும் சாப்பிடலாம்.

*தயிர் புரோபயாடிக்குகளின் சிறந்த மூலமாகும், எனவே இது உங்கள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

*கோழி இறைச்சி மற்றும் மீன் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை சரியான விகிதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

*பழங்கள், தயிர் மற்றும் ஐஸ் ஆகியவற்றால் செய்யப்பட்ட ஸ்மூத்திகள் உங்கள் உடலுக்கு புத்துணர்ச்சியை தரும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

கோடை காலங்களில், உடலில் வறட்சியை ஏற்படுத்தும் மற்றும் உடலை மந்தமாக வைக்கும் உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

*வறுத்த உணவுகளில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளதால், உடல் ஜீரணிக்க மிகவும் சிரமப்படும், இதனால் உடல் மந்தமாகவும் சோர்வாகவும் இருக்கும்.

*காரமான உணவுகள் உடல் வெப்பநிலையை அதிகரித்து, வியர்வையை உண்டாக்கும், இது உடலில் வறட்சியை ஏற்படுத்தும்.

*சிப்ஸ் மற்றும் மிட்டாய் போன்ற பதப் படுத்தப்பட்ட தின்பண்டங்களில் சர்க்கரை மற்றும் உப்பு அதிகமாக இருப்பதால் அவையும் உடலில் வறட்சியை ஏற்படுத்தும்.

உடலை நீர்சத்துடன் வைத்திருக்க ஆலோசனைகள்

கோடை காலங்களில் பெரும்பாலான நேரம் நாம் வெளியே சுற்றுவதால் நமது உடலின் நீர்சத்து குறைந்து வறட்சி ஏற்படும். உடலை நீர்சத்துடன் வைத்திருக்க சில ஆலோசனைகள்

*தாகம் எடுக்காவிட்டாலும், நாள் முழுவதும் தவறாமல் தண்ணீர் குடிக்கவும்.

*வெளியே செல்லும்போது தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்லுங்கள்.

*பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்ணுங்கள்.

*சோடா உள்ளிட்ட சர்க்கரை அதிகம் உள்ள பானங்கள் குடிப்பதை தவிர்க்கவும், இவை உங்கள் உடலின் நீர்சத்தை குறைத்து வறட்சியை ஏற்படுத்தும்.

*நீங்கள் உடற்பயிற்சி செய்பவராக இருந்தால் அல்லது வெளியில் அதிக நேரத்தை செலவிடுகிறீர்கள் என்றால், இவற்றை மேற்கொள்வதற்கு முன்னும் பின்னும் அதிக அளவில் தண்ணீர் குடிக்கவும்.

சூரிய ஒளியில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி?

கோடை காலங்களில் நீங்கள் வெளியில் நேரத்தை செலவிடும்போது, உங்கள் சருமத்தை கவனித்துக்கொள்வது மற்றும் சூரிய கதிர்களில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வதும் அவசியம் ஆகும். அதற்கான சில யோசனைகள் இதோ…

*சூரிய ஒளியில் இருந்து உங்கள் முகத்தையும் உச்சந்தலையையும் பாதுகாக்க தொப்பி அணியுங்கள்.

*புற ஊதா கதிர்களில் இருந்து உங்கள் கண்களைப் பாதுகாக்க சன்கிளாஸ்களை அணியுங்கள்.

*அதிக எஸ்.பி.எப் உள்ள சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள் மற்றும் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை அல்லது நீச்சல் பயிற்சிக்கு பின் அல்லது வியர்வை ஏற்படும்போது அதற்கு பிறகு அதை மீண்டும் மீண்டும் பயன்படுத்தவும்.

*உங்கள் கைகள் மற்றும் கால்களை மறைக்கும் ஆடைகளை அணியுங்கள் அல்லது சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கும் ஆடைகளைத் தேர்ந்தெடுத்து
அணியுங்கள்.

*அதிக வெயிலில் வெளியே செல்லும்போது சிறிது நேரம் நிழலில் ஓய்வெடுங்கள்.

இவ்வாறு மேற்கண்டவற்றை கடைபிடிக்கும்போது வெயிலால் ஏற்படும் நோய் தாக்கங்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்று ஆலோசனை வழங்கினார்
டாக்டர் அஸ்வின் கருப்பன்.

தொகுப்பு: நிஷா

You may also like

Leave a Comment

two × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi