குன்னூர் : நீலகிரி கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக பழக்கண்காட்சி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நாளை (27ம் தேதி) துவங்க உள்ளதால் முன் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடை விழா நடத்தப்படுகிறது. இதில் மலர் காய்கறி கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி, பழக்கண்காட்சி ஆகிய கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, நீலகிரியில் கோடை விழாவில் நிறைவு நிகழ்வாக பழக்கண்காட்சி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நாளை (27ம் தேதி) துவங்குகிறது.
பழக்கண்காட்சிக்காக பூங்காவில் நடவு செய்யப்பட்ட இரண்டரை லட்சம் மலர் நாற்றுகள் தற்போது பூத்து குலுங்குகிறது. மேலும் பழங்களால் பல்வேறு வகையான உருவங்கள் வைக்கப்பட உள்ளன. இதில் இருவாச்சி பறவை, ஊட்டி 200, மஞ்சப்பை உட்பட பல்வேறு வகையான உருவங்கள் வைக்கும் பணியில் பூங்கா தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து பழக்கண்காட்சியை, நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைக்க உள்ளனர்.