திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி நம்பாக்கம் கிராமத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் தினமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் நீர்த்தேக்க தொட்டியின் பைப் லைன் பழுதடைந்ததால் கடந்த 10 நாட்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது. இதுபற்றி நம்பாக்கம் கிராம மக்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோரிடம் தெரிவித்தும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இதனால் கடும் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 50க்கு மேற்பட்டவர்கள் திரண்டு இன்றுகாலை திருவள்ளூர் – பென்னலூர்பேட்டை சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். அப்போது திருவள்ளூரில் இருந்து பிளேஸ்பாளையம் நோக்கி சென்ற அரசு பேருந்தை சிறைப்பிடித்து பிடித்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் பென்னலூர்பேட்டை போலீசார் வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ‘’உடனடியாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று போலீசார் உறுதியளித்தையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதன்காரணமாக சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதித்தது.