Thursday, May 16, 2024
Home » சுசீந்திரம் இரட்டை கொலை வழக்கில் 12 ஆண்டுகளாக தேடல் ரியல் எஸ்டேட் அதிபராக வலம் வந்த பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது: சென்னை சாலிகிராமத்தில் சிபிசிஐடி அதிரடி; தென் மாவட்ட ரவுடிகளுக்கு ஆயுதம் சப்ளை அம்பலம்

சுசீந்திரம் இரட்டை கொலை வழக்கில் 12 ஆண்டுகளாக தேடல் ரியல் எஸ்டேட் அதிபராக வலம் வந்த பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது: சென்னை சாலிகிராமத்தில் சிபிசிஐடி அதிரடி; தென் மாவட்ட ரவுடிகளுக்கு ஆயுதம் சப்ளை அம்பலம்

by Karthik Yash

சென்னை: சுசீந்திரத்தில் கடந்த 2011ம் ஆண்டு வனத்துறை அதிகாரி மற்றும் அவரது மனைவியை சுட்டு கொன்ற இரட்டை கொலை வழக்கில், சென்னையில் கடந்த 12 ஆண்டுகளாக ரியல் எஸ்ேடட் அதிபராக வலம் வந்து, தென் மாவட்ட ரவுடிகளுக்கு ஆயுத சப்ளை செய்து வந்த பிரபல ரவுடி சதாசிவத்தை சிபிசிஐடி போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அருகே உள்ள தேரூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் வனத்துறையில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி யோகீஸ்வரி. இவருக்கும், அவரது உறவினரான சகாயம் என்பவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சகாயம் அப்போது அதிமுக மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளராக இருந்தார். தனது கட்சியின் பலத்தை வைத்து யோகீஸ்வரியை அவர் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

அதேநேரம், கடந்த 2011 நவம்பர் 10ம் தேதி வனத்துறை அதிகாரி ஆறுமுகம் தனது மனைவி யோகீஸ்வரியுடன் உறவினர் திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். தேரூர் அருகே வரும் போது, ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி யோகீஸ்வரி ஆகிய 2 பேரை வழிமறித்து துப்பாக்கியால் கொடூரமாக சுட்டு கொன்றனர். இந்த சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து உறவினர் சகாயம் உள்பட 14 பேர் மீது வழக்கு பதிவு ெசய்தனர். சகாயம் உள்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கில் சகாயம் உள்ளிட்ட அனைவரும் ஜாமீனில் தற்போது வெளியே உள்ளனர். சகாயம் அதிமுகவில் இருந்து விலகி தற்போது பாஜ மாநில மீனவர் பிரிவு செயலாளராக இருந்து வருகிறார்.

இதற்கிடையே தனது மகள் கொலையில் பல மர்மங்கள் இருப்பதாக யோகீஸ்வரி தாய் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து சட்டம் -ஒழுங்கில் இருந்து இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றினார். அதன்படி சிபிசிஐடி போலீசார் இரட்டை கொலை தொடர்பாக கடந்த 12 ஆண்டுகளாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில், கடந்த வாரம் வாகன சோதனையின் போது பயங்கர ஆயுதங்களுடன் ரவுடிகள் பலர் போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய போது, பிரபல ரவுடி சதாசிவம் (54) மூலம் ஆயுதங்கள் கொள்முதல் செய்தோம் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் கன்னியாகுமரி மாவட்ட சிபிசிஐடி போலீசாருக்கு தெரியவந்தது. உடனே ஆயுதம் விற்பனை செய்த சதாசிவம் யார் என்பது குறித்து விசாரணை நடத்திய போது, அவர் சுசீந்திரத்தில் இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சதாசிவம் என தெரியவந்தது. இவர், கடந்த 12 ஆண்டுகளாக சென்னை சாலிகிராமத்தில் தங்கியிருந்து ரியல் எஸ்டேட் அதிபர் போல வலம் வந்ததும் தெரிவந்தது.

போலீசாருக்கு எந்தவித சந்தேகமும் வராதபடி ரவுடி சதாசிவம், தன்னை பெரிய தொழிலதிபர் என்று அடையாளப்படுத்திக் கொண்டு வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை தென் மாவட்ட ரவுடிகளுக்கு விற்பனை செய்து வந்ததும் அம்பலமானது. அதைதொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து வந்த சிபிசிஐடி போலீசார், சென்னை சாலிகிராமத்தில் தொழிலதிபர் போர்வையில் பதுங்கி இருந்த ரவுடி சதாசிவத்தை துப்பாக்கி முனையில் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிபிசிஐடி போலீசார் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இரவோடு இரவாக அழைத்து சென்றனர். இரட்டை கொலை வழக்கில் கடந்த 12 ஆண்டுகளாக ரியல் எஸ்ேடட் தொழிலதிபர் போல் வலம் வந்த பிரபல ரவுடி ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

eleven − 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi