மதுரை: மதுரை அரசு மருத்துவக் கல்லூரியின் மயக்கவியல் துறை துணை பேராசிரியர் மீது 23 மாணவிகள் அளித்த பாலியல் புகாரின் பேரில் விசாக கமிட்டியின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு அவரை சஸ்பெண்ட் செய்திருப்பதாக மருத்துவமனை டீன் ரத்தினவேலு தெரிவித்துள்ளார். இந்த பணியிடை நீக்கத்தை மதுரை மருத்துவக்கல்லூரியின் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியின் மயக்கவியல் துறை துணை பேராசிரியராக செய்யது தாகிற் உசேன் என்பவர் உள்ளார். இவர் மயக்கவியல் துறை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக ஏற்கனவே புகார் எழுந்திருந்தது. இந்த புகாரை விசாரிக்க விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி பாதிக்கப்பட்ட மாணவிகளை நேரடியாக அழைத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
அதில் கடந்த 6-ம் தேதி 23 மாணவிகள் எழுத்துபூர்வமாக புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின் அடிப்படையில், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில், புகாரில் உண்மை இருப்பதாக தெரியவந்ததை அடுத்து துணை பேராசிரியர் செய்யது தாகிற் உசேன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.