சென்னை: 1-5ம் வகுப்பில் மாணவர்கள் வருகையை அதிகரிக்கவே காலை உணவு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காலை சிற்றுண்டி திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். திருச்சியில் அமைச்சர் நேரு, புதுக்கோட்டை முள்ளூர் பள்ளியில் அமைச்சர் ரகுபதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். மன்னார்குடி உள்ளிக்கோட்டை பள்ளியில் அமைச்சர் டிஆர்பி ராஜா காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதேபோல் சென்னை திருவல்லிக்கேணி மாநகராட்சி பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு உணவு பரிமாறினார். பின்னர் குழந்தைகளுடன் அமர்ந்து அவர் உணவு அருந்தினார். மாணவர்களுக்கு ரவா கிச்சடி, ரவா கேசரி காலை உணவாக வழங்கப்பட்டது. இவ்விழாவில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைகளின் பராமரிப்பு குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 1-5ம் வகுப்பில் மாணவர்கள் வருகையை அதிகரிக்கவே காலை உணவு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பசி நீக்கி அறிவு புகட்டும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அனைவருக்குமான கல்வியை உறுதி செய்யும். காலை உணவு திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்களின் வருகை 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. காலை உணவு திட்டத்தில் நானும் ஒரு பயனாளி தான்; தொடர்ந்து உணவு தரம் பற்றி ஆய்வு செய்யப்படும் என தெரிவித்தார்.