Friday, May 31, 2024
Home » மாணவர்கள் பள்ளியிலேயே ஆதார் எண் பெறுவதற்கு புதிய பதிவுகள் , புதுப்பித்தல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

மாணவர்கள் பள்ளியிலேயே ஆதார் எண் பெறுவதற்கு புதிய பதிவுகள் , புதுப்பித்தல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

by Porselvi

சென்னை : அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அப்பள்ளியிலேயே ஆதார் எண் பெறுவதற்கு புதிய பதிவுகள் மற்றும் ஆதார் எண் புதுப்பித்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர், அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான ஆதார் மையங்களை உருவாக்குதல் தொடர்பாக கீழ்க்கண்ட விவரங்களைத் தெரிவித்துள்ளார்.

i. பள்ளிக் கல்வித் துறையில் மாணவ, மாணவியர்களின் நலனுக்காக பல்வேறு புதுமையான செயல்பாடுகளை, திட்டங்களை வகுத்து, முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து நிலை மாணவர்களும் இடைநிற்றலின்றி தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக, உதவித் தொகைகள் மற்றும் ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வுதவி மற்றும் ஊக்கத் தொகை அனைத்தும், பயனாளர்களுக்கு குறித்த நேரத்தில் முறையாக சென்று சேருவதை உறுதி செய்யும் விதமாக, நேரடி பயனாளர் பரிமாற்றம் (DBT) மூலம் பயனாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்திடும் முறை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

ii. இவ்வாறாக நேரடி பயனாளர் பரிமாற்றம் (DBT) செய்வதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு வங்கி கணக்கு தேவைப்படுகிறது. அவ்வாறாக மாணவர்களுக்கு புதிதாக ஒரு வங்கி கணக்கு துவங்குவதற்கு ஆதார் எண் அவசியமாகிறது. எனவே, தமிழ்நாட்டிலுள்ள, அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டையை வழங்கிடுவது அவசியமாகும். பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 1 முதல் 12 வகுப்பு வரை சுமார் 1.25 கோடி மாணவ, மாணவியர்கள் பயின்று வருகிறார்கள். இவர்களில் ஆதார் அடையாள அட்டையில்லாத மாணவர்களுக்கு புதிய பதிவினை செய்யும் பணியினை உடனடியாக மேற்கொள்ள வேண்டிய அவசியத்தினை கருத்தில் கொண்டும், ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 17 இலட்சம் மாணவ, மாணவியருக்கு கட்டாயப் புதுப்பித்தல் பணி மேற்கொள்வதை கருத்தில் கொண்டும், இப்பணிகளை மேற்கொள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர். இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்திடம் (UIDAI), பதிவாளராக பதிவு பெற்றுள்ளார்.

iii. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்திடமிருந்து 770 ஆதார் பதிவுக் கருவிகளைக் கொள்முதல் செய்து, தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திடம் (ELCOT) ஒப்படைத்துள்ளது. தமிழ்நாடு மின்னணு நிறுவனம் ஆதார் பதிவுகளை மேற்கொள்வதற்கு தேவையான ஆதார் தரவு உள்ளீட்டாளர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு பயிற்சியினை வழங்கி அனைத்து மாவட்டங்களிலும் ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

iv.இப்பணியினை செவ்வனே மேற்கொள்ள ஏதுவாக பள்ளிக் கல்வித் துறை மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தினரின் பணிகள் மற்றும் பொறுப்புகள் சார்ந்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) வகுக்க வேண்டியது அவசியம்.மாணவர்களின் வயதின் 2. பள்ளிகளில் ஆதார் பதிவினை அடிப்படையில் நான்கு நிலைகளில் கீழ்க்கண்டவாறு மேற்கொள்ள ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.

(i) பள்ளிகளில் ஆதார் பதிவு நிலைகள்:
நிலை-1 : 0-5 வயது – புதிய பதிவு:
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) குழந்தை பதிவு சேர்க்கை கொள்கையின்படி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள்

பயோமெட்ரிக் பண்புக் கூறுகள் அதாவது. கைரேகை மற்றும் கருவிழி படங்கள் பிடிக்கப்படுவதில்லை. பெற்றோரின் ஆதார் விவரங்கள் மற்றும் கைரேகை அங்கீகாரத்துடன் குழந்தையின் முகம் மட்டும் பதிவு செய்யப்படுகிறது. இவ்வகை புதியப் பதிவுகளை தற்போது பள்ளிகளிலேயே மேற்கொள்ளலாம். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் (ICDS) துறையுடன் இணைந்து இவ்வகையான பதிவினை மேற்கொள்வது சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும்.

நிலை 2 : 5-7 வயது வரை கட்டாய பயோமெட்ரிக் பதிவு செய்தல்
குழந்தைகள் 5 வயதை அடைந்தவுடன் பயோமெட்ரிக் தகவல்களை (முகம், கைரேகைகள் மற்றும் கருவிழிகள்) கட்டாயம் பதிவு செய்தல் வேண்டும். இவ்வகை பதிவு செய்தல் பணிகளையும் தற்போது பள்ளிகளிலேயே மேற்கொள்ளலாம். மேலும் பதிவுசெய்தலின் போது பிறந்த தேதி, பெயர் முகவரி, அலைபேசி எண் போன்றவற்றில் உள்ள திருத்தங்களையும் எவ்வித கட்டணமுமின்றி மேற்கொள்ளலாம்.

நிலை -3 : 15-17 வயது: கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல்
குழந்தைகள் 15 வயதை அடைந்த பிறகு மீண்டும் நிலையான பயோமெட்ரிக் தகவல்களை (முகம், கைரேகைகள் மற்றும் கருவிழிகள்) கட்டாயம் புதுப்பிக்க வேண்டும். இவ்வகை புதுப்பித்தல் பணிகளையும் தற்போது பள்ளிகளிலேயே மேற்கொள்ளலாம். மேலும் இப்புதுப்பித்தலின் போது பிறந்த தேதி, பெயர், முகவரி, அலைபேசி எண் போன்றவற்றில் உள்ள திருத்தங்களையும் எவ்வித கட்டணமுமின்றி மேற்கொள்ளலாம்.

நிலை4: 7-வயதிற்கு மேற்பட்ட 15-வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான கட்டாய பயோமெட்ரிக் பதிவு செய்தல்
குழந்தைகள் 5 வயதை அடைந்தவுடன் பயோமெட்ரிக் தகவல்களை (முகம், கைரேகைகள் மற்றும் கருவிழிகள்) கட்டாயம் பதிவு செய்தல் வேண்டும். அவ்வாறு 5-முதல் 7-வயது வரை பதிவு செய்யாமலுள்ள 7- வயதிற்கு மேற்பட்ட 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான பயோமெட்ரிக் தகவல்களை பதிவு செய்தல் பணிகளையும் தற்போது பள்ளிகளிலேயே மேற்கொள்ளலாம். மேலும் பதிவுசெய்தலின் போது பிறந்த தேதி, பெயர் முகவரி, அலைபேசி எண் போன்றவற்றில் உள்ள திருத்தங்களையும் எவ்வித கட்டணமுமின்றி மேற்கொள்ளலாம். மேலும், இப்பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களுக்கான பணிகள் மற்றும் பொறுப்புகள் சார்ந்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுமாறு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேற்காண் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் அவர்களின் கருத்துருவினை கவனமுடன் ஆய்வு செய்து அதனை ஏற்று, “பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு” என்ற சிறப்பு முன்னெடுப்பின் கீழ் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் எண் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அப்பள்ளியிலேயே ஆதார் பெறுவதற்கு புதிய பதிவுகள் மற்றும் ஆதார் எண் புதுப்பித்தல் தொடர்பான பணிகளை தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தினைக் (ELCOT) கொண்டு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் மேற்கொள்ள அனுமதியளித்தும், அப்பணிகளுக்கென தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களுக்கான பணிகள் மற்றும் பொறுப்புகள் சார்ந்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை(Standing Operating Procedure(SOP)) இவ்வாணையின் இணைப்பில் வெளியிட்டும் அரசு ஆணையிடுகிறது.

You may also like

Leave a Comment

2 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi