பொன்னேரி: பொன்னேரி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஆய்வு செய்தார். அப்போது, வகுப்பறைக்குள் சென்ற அமைச்சர் மாணவர்களுடன் கலந்துரையாடினார். இதனை தொடர்ந்து, பள்ளியில் உள்ள அடிப்படை வசதிகள், ஆய்வகங்கள் குறித்து தலைமை ஆசிரியையிடம் கேட்டறிந்தார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் பேசுகையில், பள்ளிகள் அனைத்தும் தன்னிறைவு பெற வேண்டும் என்ற அடிப்படையில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் 18,000 வகுப்பறைகளை, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கட்டிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முதல்வர் 1,000 வகுப்பறைகளை திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
இந்நிலையில் மேலும், 1,000 வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. விரைவில் அந்த வகுப்பறைகளும் முதலல்வரால் திறந்து வைக்கப்படும். மாணவர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர்கள், காவல்துறை, தன்னார்வலர்கள் மூலம் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களை குற்றவாளிகளை போல பார்க்க முடியாது. கூட்டு பொறுப்பின் அடிப்படையில் மாணவர்களை நல்வழிப்படுத்துவோம் என்றார். இந்த ஆய்வின்போது, பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராசன், முதன்மைக் கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் முகமது அப்துல்லா, ஜாக்டோ ஜியோ மாநில தலைவர் காத்தவராயன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து மீஞ்சூர் அடுத்த புதுப்பேடு கிராமத்தில் உள்ள சிற்பி கலைக்கூடத்தில், திருச்சியில் வைப்பதற்காக தயாராக உள்ள கலைஞரின் முழு உருவ சிலையை பார்வையிட்டு சிலை குறித்து ஆலோசனை செய்தார். பின்னர் வல்லூரில் உள்ள திமுக அலுவலகத்தில் ஒன்றியச் செயலாளர் வல்லூர் ரமேஷ் ராஜ் ஏற்பாட்டில் வைக்கப்பட்டிருந்த நிவாரண உதவிகளை திருநங்கைகளுக்கு அமைச்சர் வழங்கினார். இதனையடுத்து அத்திப்பட்டு புதுநகர் பள்ளம் பகுதியில் பொதுமக்களுக்கும் நிவாரண பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் கோவிந்தராஜன், துரை சந்திரசேகர், தகவல் தொழில்நுட்ப மாநில துணைச் செயலாளர் சேகர், மூர்த்தி, பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன், திமுக ஒன்றிய செயலாளர்கள் காணியம்பாக்கம் ஜெகதீசன், வல்லூர் ரமேஷ் ராஜ், வழுதிகைமேடு செல்வ சேகரன், மீஞ்சூர் ஒன்றியக்குழு தலைவர் ரவி, மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் லோகேஷ், தேவம்பட்டு முரளி, அன்புவாணன், முத்து, நகரச் செயலாளர்கள் பொன்னேரி ரவிக்குமார், மீஞ்சூர் தமிழ் உதயன், துணைத் தலைவர் அலெக்சாண்டர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
* அரசுப் பள்ளியில் திடீர் ஆய்வு
கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் கே.எல்.கே. அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று திடீரென அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ ஆகியோர் இப்பள்ளிக்கு வந்தனர். அங்குள்ள சமையலறை, வகுப்பறை, கழிப்பறை, விளையாட்டு மைதானம் ஆகியவற்றை அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது, கழிப்பறை, விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்ய வேண்டும் என அங்கிருந்த தலைமை ஆசிரியர் ராமமூர்த்தியிடம் அமைச்சர் உத்தரவிட்டார். பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்தவும், பள்ளியை சுற்றி சுற்று சுவர் அமைக்க நிதி ஒதுக்குவது குறித்தும் பேசினார். இதைத்தொடர்ந்து, முன்னாள் திமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கும்மிடிப்பூண்டி கி.வேணு மறைவையொட்டி அவருடைய பனப்பாக்கம் வீட்டுக்கு அமைச்சர் சென்றார். அங்கிருந்த, அவருடைய திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியச் செயலாளரும், வேணுவின் மகனுமான கி.வே ஆனந்தகுமாருக்கு ஆறுதல் கூறினார். இதேபோன்று மாநில தகவல் தொழில்நுட்பத் அணி இணை செயலாளர் சி.எச்.சேகரின் தாயார் மறைவையொட்டி மா.பொ.சி நகர் பகுதியில் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.