புதுடெல்லி: புதிய கல்விக்கொள்கையை மேம்படுத்துவதற்காக ‘மாணவர் தூதர் திட்டம்’ என்ற திட்டத்தை தொடங்கவுள்ளதாக பல்கலைக் கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. 34 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக ஒன்றிய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையை கடந்த 2020ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினரும் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். இந்தநிலையில், தேசிய கல்விக் கொள்கை 2020ஐ மேம்படுத்த பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களிலிருந்து 300 மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதுகுறித்து பல்கலைக் கழக மானியக்குழு தலைவர் ஜெகதீஷ் குமார் கூறியதாவது, “புதிய தேசிய கல்விக் கொள்கையை ஊக்குவிக்க, அதனை மேம்படுத்துவது தொடர்பான கருத்துகளை பெற நாடு முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் இருந்து 300 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சிறந்த ஆளுமைத்திறன், தகவல் தொடர்பு திறன், படைப்பாற்றல், குழு தலைமை, பொறுப்புணர்வு கொண்ட மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். உயர்கல்வி அமைப்பில் செய்யப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் கொண்டு செல்ல 300 மாணவர்களும் மாணவர் தூதர்களாக செயல்படுவார்கள்” என்றார்.