போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பஞ்சாயத்து கோணணூர் கிராமத்தில், பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோயிலில், மகாபாரத பிரசங்க அக்னி வசந்த உற்சவ விழா நடந்து வருகிறது. அங்கு நேற்று துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. கோயில் முன்பு 30 அடி நீள பிரமாண்ட துரியோதனன் மண்சிலை அமைக்கப்பட்டு, அதன் பிறகு திரவுபதியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
தொடர்ந்து பாரத போரை நினைவுபடுத்தும் வேடமணிந்த தெருக்கூத்து கலைஞர்கள் கோயிலிலிருந்து ஊர்வலமாக சென்று, துரியோதனனுக்கும், பீமனுக்கும் மோதல் ஏற்படும் நிகழ்ச்சியை தத்ரூபமாக நடித்து காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களை துடைப்பத்தால், அடிக்கும் வினோத வழிபாடு நடந்தது. இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர், துடைப்பத்தால் அடி வாங்கி, காணிக்கை வழங்கி சென்றனர்.