சென்னை: புயல் எதிரொலியால் பழவேற்காட்டில் 1,000க்கும் மேற்பட்ட படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் 5,000 மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ள நிலையில் மீன்வளத்துறை அறிவுரையின் பேரில் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, நாளை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதன் பின்னர் புயலாக வலுப்பெற உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை யாரும் கடலுக்குச் செல்லக் கூடாது என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் வேலன் உத்தரவிட்டுள்ளார். காற்றின் வேகம் 80 கிமீ வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து பழவேற்காட்டில் சுமார் 5,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்குச் செல்லவில்லை. இதனால் சுமார் 1,000க்கும் மேற்பட்ட படகுகள் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்திவைத்து, மீன்பிடி வலைகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.