விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் இரண்டாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இதுவரை 15 குழிகள் தோண்டப்பட்டு, அவைகளில் சுடுமண் பொம்மை, யானை தந்தத்தாலான பகடை உள்ளிட்ட 3,300 அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சமீபத்தில் தோண்டிய 15வது குழியில் மெருகூட்டும் கற்கள் கிடைத்துள்ளன.
இது குறித்து அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் கூறுகையில், ‘விஜயகரிசல்குளம் அகழாய்வில் சுடுமண்ணால் ஆன பானை, சங்கு வளையல் தயாரிப்பு தொழிற்கூடங்கள் இருந்ததற்கான சான்றுகள் அதிகளவில் கிடைத்துள்ளன. நேற்று முன்தினம் 15வது குழியில் நடந்த அகழாய்வில் மெருகூட்டும் கற்கள் அதிக எண்ணிக்கையில் கிடைத்துள்ளன. இந்த கற்கள் சங்கு வளையல் உள்ளிட்ட பொருட்களை மெருகூட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம்’ என்றார்.