இட்டாநகர்: அருணாச்சலபிரதேச மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன், சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இங்கு வேட்புமனுத்தாக்கல் முடிந்து நேற்று பரிசீலனை நடந்தது. அப்போது லாங்டிங் மாவட்டத்தில் நேற்று வன்முறை வெடித்தது. பொங்சௌ-வக்கா தொகுதியில் மனுத்தாக்கல் செய்த தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் காங்டியாப் கங்சாவின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்ததால் பலத்த மோதல் ஏற்பட்டது. அவர் உதவி கனிம மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
தேர்தல் அறிவிப்புக்கு முன்பு பதவியை அவர் ராஜினாமா செய்தார். அவரது கோரிக்கை அரசால் ஏற்கப்படவில்லை. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இருப்பினும் மனு நிராகரிக்கப்பட்டதால் கங்சா ஆதரவாளர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த கல்வீச்சில் லாங்டிங் எஸ்பி டெக்கியோ கும்ஜா காயம் அடைந்தார். இதைதொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தி போலீசார் கூட்டத்தை கலைத்தனர்.